×
 

மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேர் கொலை! சிறுமி பாலியல் வன்கொடுமை! போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்தவர் வெறிச்செயல்!

போக்சோ வழக்கில் கைதாகி சிறை சென்று திரும்பிய வாலிபர் தனது மனைவி, குழந்தைகள் உள்பட 6 பேரை கொடூரமாக வெட்டி கொலை செய்ததுடன் தன் மீது புகார் அளித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்று இருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் போக்சோ வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த வாலிபர், தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்பட ஆறு பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தனது மீது புகார் அளித்த 17 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போலீசார் கூறியதன்படி, தெய்வலகுடா பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் மீது, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த அவர், தன்னை சிறைக்கு அனுப்ப காரணமாக இருந்தவர்களை பழிவாங்க முடிவு செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தன்று இரவு, முதலில் புகார் அளித்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற ராஜ்குமார், சிறுமியின் தாய் லட்சுமி மற்றும் பாட்டி ருக்கம்மாவை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்த 17 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். சிறுமியின் உடல் ஏரிக்கரையில் மீட்கப்பட்டது.

இதையும் படிங்க: தொழிலதிபரை மிரட்டிய கும்பல்!!! 4 பேரை என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற போலீசார்! ஹரியானாவில் பயங்கரம்!

அதன்பிறகு தனது வீட்டுக்குத் திரும்பிய ராஜ்குமார், மனைவி சரிதா மற்றும் நான்கு, இரண்டு வயதுடைய தனது இரு ஆண் குழந்தைகளையும் தூங்கிக் கொண்டிருந்தபோது தாக்கி கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் தனது தந்தைக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு, அனைவரையும் கொன்றுவிட்டதாகவும், தானும் உயிரை மாய்த்துக்கொள்ளப்போவதாகவும் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஆறு பேரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. குற்றச்சாட்டுக்குள்ளான ராஜ்குமார் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரைக் கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடைபெற்று வருகிறது.

விசாரணையில், ராஜ்குமார் சூதாட்டத்தில் ஈடுபட்டு சுமார் ரூ.1.5 கோடி வரை கடன் சுமையில் இருந்ததும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், சிறுமியின் வீட்டில் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை அவர் தாக்காமல் விட்டுச் சென்றதும் விசாரணையில் பதிவாகியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் தெலுங்கானா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோரின் உறவினர்கள், குற்றவாளியை உடனடியாக கைது செய்து கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

இதையும் படிங்க: போதையில் தகராறு செய்த கணவன்!! கத்தியால் குத்தி கதையை முடித்த மனைவி!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share