போதையில் தகராறு செய்த கணவன்!! கத்தியால் குத்தி கதையை முடித்த மனைவி!!
ஆத்திரம் அடைந்த திவ்யபாரதி, கணவரை கீழே தள்ளிவிட்டதுடன் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மணியின் கழுத்தில் குத்தியதாக தெரியவருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கணவரை, ஆத்திரத்தில் மனைவி கத்தியால் கழுத்தில் குத்திக் கொன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாத்தூர் அருகே உப்புத்தூர் கிராமம், சங்கராபுரத்தைச் சேர்ந்த மணி (35) கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அவரது மனைவி திவ்யபாரதி (26). இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் ஆன நிலையில், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக குடும்பப் பிரச்சினை காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும், குறிப்பாக மணி மதுபோதையில் வீட்டுக்கு வந்த பிறகு வாக்குவாதம் அதிகரித்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மணி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், மனைவியுடன் மீண்டும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், மனைவியின் நடத்தையில் சந்தேகம் தெரிவித்ததுடன், அவரை தாக்க முயன்றதாகவும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: என் பேருதானே முதல்ல வரணும்? கீர்த்தனா பெயரை ஏன் போட்டீங்க? கலெக்டரிடம் அமைச்சர் ஜெகதீஸ்வரி வாக்குவாதம்?!
இதனால் ஆத்திரமடைந்த திவ்யபாரதி, கணவரை கீழே தள்ளிவிட்டு, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பலத்த காயமடைந்த மணி, சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று மணியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், திவ்யபாரதியிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், திவ்யபாரதியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன்-மனைவிக்கு இடையிலான நீண்டகால குடும்பத் தகராறு மற்றும் சம்பவத்துக்கு முன்பு நடந்த வாக்குவாதம் உள்ளிட்ட அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், குடும்பத் தகராறுகள் மற்றும் மதுப் பழக்கத்தால் ஏற்படும் வன்முறை சம்பவங்கள் குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது.
இதையும் படிங்க: கணவரை கொன்று புதைத்து நாடகமாடிய மனைவி! குளியலறையில் கிடைத்தது சடலம்!