×
 

இன்னொரு எம்.ஜி.ஆராக உருவெடுத்த விஜய்... இரட்டை இலையை விழுங்கும் விசில்... மீண்டும் மீளுமா அதிமுக?

சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றியை விட அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

தமிழக அரசியலில் எம்ஜிஆர் தொடங்கிய அதிமுகவுக்கு, நடிகர் விஜயின் அரசியல் எழுச்சி மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. “திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி” என்ற விஜயின் அரசியல் நிலைப்பாடு தற்போது நடைமுறையிலும் பிரதிபலிக்கத் தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் தவெகவின் வெற்றியை விட அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பிளவுகளே அதிக கவனத்தை ஈர்த்துள்ளன.

அதிமுகவில் பிளவு ஏற்படுவது புதிதல்ல. எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா மறைவுகளுக்குப் பிறகும் பல்வேறு தரப்புகளாக கட்சி பிரிந்தது. ஆனால் அத்தகைய சூழல்களில் கூட அதிமுகவின் அடையாளம் அல்லது எதிர்காலம் குறித்து பெரிய சந்தேகம் எழவில்லை. காரணம், அந்தப் பிளவுகளில் இருந்து மீண்டு கட்சி தன்னுடைய வலிமையை மீண்டும் கட்டியெழுப்பிய அனுபவம் இருந்தது. ஆனால் தற்போதைய சூழல் வேறுபட்டதாக பார்க்கப்படுகிறது. தாவேக என்ற புதிய அரசியல் சக்தி உருவாகியுள்ள நிலையில், அதிமுகவின் ஆதரவுத்தளமே அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் மதிப்பிடுகின்றனர்.

விஜய் அரசியலுக்கு வந்த முதல்நாளிலிருந்தே தனது முக்கிய அரசியல் எதிரியாக திமுகவை சுட்டிக்காட்டினார். அதே நேரத்தில் அதிமுகவின் பெயரை நேரடியாக தாக்காமல், அதன் வாக்கு வங்கியையே குறிவைத்து நகர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் “விஜயின் இலக்கு திமுகவை மட்டுமல்ல, அதிமுகவின் அரசியல் இடத்தையும் கைப்பற்றுவதே” என்ற கருத்து வலுத்தது. தற்போது அந்த கணிப்பு உண்மையாகி வருவதாக பலரும் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: இனி Towel Culture-க்கு நோ! அதிகாரத்தின் அடையாளத்தை உடைத்தெறிந்த முதல்வர் விஜய்!

எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவும், விஜயின் அரசியல் பயணமும் சில அம்சங்களில் ஒற்றுமை கொண்டதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். காங்கிரஸில் இருந்து திராவிட இயக்க அரசியலுக்குள் வந்த எம்ஜிஆர், பின்னர் கருணாநிதியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் பின்னர் 1972ஆம் ஆண்டு அதிமுகவை தொடங்கினார். கட்சிக் கொள்கையை விட எம்ஜிஆரின் தனிப்பட்ட செல்வாக்கே அக்கட்சியின் ஆரம்ப வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்தது. அதேபோல், சினிமாவில் மிகப்பெரிய ரசிகர் வட்டத்தை உருவாக்கிய விஜய், 2024ஆம் ஆண்டு அரசியல் கட்சியை தொடங்கி, குறுகிய காலத்திலேயே மக்களிடம் வலுவான எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.

சில பொதுக்கூட்டங்கள், குறைந்த அளவிலான பிரச்சார பயணங்கள் மட்டுமே மேற்கொண்டிருந்தாலும், “விஜயை முதல்வராக பார்க்க வேண்டும்” என்ற மனநிலை ஒரு பகுதி மக்களிடையே உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிரதிபலிப்பாகவே தமிழக வெற்றிக் கழகத்திற்கு கணிசமான வாக்கு ஆதரவு கிடைத்ததாக அரசியல் விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக, புதிய அரசியல் சக்திகளை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தும் அரசியல் திறனை வெளிப்படுத்தியிருந்தது. குறிப்பாக, விஜயகாந்தின் தேமுதிக எழுச்சியை கூட்டணி அரசியல் மூலம் சமாளித்து, பின்னர் அந்தக் கட்சியின் பல முக்கிய தலைவர்களை தன்னுடன் இணைத்துக்கொண்டார் ஜெயலலிதா. ஆனால் அதேபோன்ற அரசியல் அணுகுமுறையை எடப்பாடி பழனிசாமி கையாளவில்லை என்ற விமர்சனம் தற்போது எழுகிறது.

விஜயின் அரசியல் வளர்ச்சியை ஆரம்பத்தில் அதிமுக தரப்பு பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. “எப்படியும் கூட்டணிக்குள் கொண்டு வரலாம்” என்ற நம்பிக்கையிலேயே அதிமுக தலைமையினர் இருந்ததாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் விஜய் தொடக்கம் முதலே தனித்த அரசியல் அடையாளத்தையே முன்னிறுத்தினார். தன்னை நேரடியாக முதல்வர் வேட்பாளராக நிலைநிறுத்தியதோடு, எம்ஜிஆர் மற்றும் அண்ணா போன்ற அதிமுகவின் அடையாளங்களை பயன்படுத்தி திமுக எதிர்ப்பை தீவிரப்படுத்தினார்.

மேலும், அதிமுகவின் தற்போதைய தலைமையையும் விஜய் மறைமுகமாக கேள்விக்குள்ளாக்கி வந்தார். “எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டியெழுப்பிய கட்சி இன்று எந்த நிலையில் உள்ளது?” என்ற கேள்வியை பல்வேறு மேடைகளில் எழுப்பியிருந்தார். இருந்தபோதிலும், விஜயை சாதாரண நடிகர் அரசியல்வாதிகளின் வரிசையில் வைத்து மதிப்பிட்டதே அதிமுக தலைமையின் முக்கிய தவறாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அதிமுகவிலிருந்து தாவேகவுக்கு சென்ற சில முக்கிய தலைவர்கள் விஜயின் அணியில் முக்கிய இடம் பெற்றுள்ளனர். குறிப்பாக செங்கோட்டையன், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம், அதிமுகவிலுள்ள பிற நிர்வாகிகளுக்கும் புதிய அரசியல் சிந்தனையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஜெயலலிதா புகைப்படத்துடன் தாவேக நிர்வாகிகள் செயல்பட அனுமதித்தது கூட விஜயின் திட்டமிட்ட அரசியல் நகர்வாகவே பார்க்கப்படுகிறது.

அதேபோல், அதிமுகவின் எதிர்ப்பு அணியினருடன் விஜய் நெருக்கம் காட்டியதையும் அரசியல் வட்டாரங்கள் கவனிக்கின்றன. குறிப்பாக, எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து எதிர்ப்பு தரப்பினருடன் விஜய் தொடர்பு வைத்திருந்தது, அதிமுகவில் மேலும் குழப்பத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது.

எம்ஜிஆர் என்ற மக்களாட்சி பிம்பத்தால் உருவானதும், ஜெயலலிதா தலைமையில் வலுவடைந்ததுமான அதிமுக, தற்போது விஜய் என்ற புதிய நட்சத்திர அரசியலின் தாக்கத்தில் சவாலை சந்தித்து வருகிறது. “திமுக –  தவெக நேரடி போட்டி” என்ற விஜயின் அரசியல் கூற்று பகுதியளவில் உண்மையாகியுள்ளதாக அரசியல் சூழல் காட்டுகிறது. இதனால், விஜயின் வளர்ச்சியை எதிர்கொள்ள அதிமுக தலைமையினர் உடனடியாக தங்களது அரசியல் அணுகுமுறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற குரலும் வலுத்து வருகிறது.

இதையும் படிங்க: அள்ளிக் கொடுக்கும் விஜய்! எஸ்.பி வேலுமணி தரப்புக்கு அமைச்சர் பதவி! இன்னும் 3 நாளில் தவெக அமைச்சரவை விரிவாக்கம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share