ஈரானுக்கு சீனா பகிரங்க ஆதரவு! - அமெரிக்கா, இஸ்ரேல் உடனே போரை நிறுத்த சீன வெளியுறவு துறை ஆணை!
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களை கண்டித்துள்ள சீனா, ஈரானுக்கு தனது பகிரங்க ஆதரவைத் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்தி வரும் உக்கிரமானத் தாக்குதல்கள் சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டானச் சூழலில், ஈரானுக்கு ஆதரவாகச் சீனா தனது அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அறிவித்துள்ளது. ஈரானின் இறையாண்மையைக் காக்கத் தாங்கள் துணை நிற்போம் எனச் சீன வெளியுறவுத் துறை அதிரடியாகத் தெரிவித்துள்ளது.
சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரான் ஒரு சுதந்திரமான நாடு. அதன் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, சீனா ஈரானுக்கு உறுதுணையாக நிற்கும். சர்வதேசச் சட்டங்களை மீறி நடத்தப்படும் இந்தத் தாக்குதல்களை ஏற்க முடியாது" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்களது ராணுவ நடவடிக்கைகளை (Military Operations) உடனடியாக நிறுத்த வேண்டும். மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவார்த்தை ஒன்றே வழி; ஆயுதங்கள் அல்ல" எனச் சீனா எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: ஓமன் அருகே எண்ணெய் கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்.. இந்திய மாலுமி பலி! 16 இந்தியர்கள் மீட்பு!
வர்த்தக மற்றும் ராணுவ ரீதியானத் தாக்கம்: ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் பெரும் பகுதியைச் சீனா கொள்முதல் செய்து வரும் நிலையில், இந்தப் போர் சீனாவின் எரிசக்திப் பாதுகாப்பிற்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. தேவைப்பட்டால் ஈரானுக்குத் தேவையானத் தற்காப்புத் தளவாடங்களை வழங்கவும் சீனா தயாராகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே ரஷ்யா ஈரானுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், தற்போது சீனாவும் களம் இறங்கியுள்ளது. இதன் மூலம் இந்தப் போர் ஈரான்-இஸ்ரேல் என்ற எல்லையைத் தாண்டி, வல்லரசு நாடுகளுக்கிடையேயான நேரடி மோதலாக மாற வாய்ப்புள்ளதாகப் பாதுகாப்பு ஆய்வாளர்கள் அஞ்சுகின்றனர்.
சீனாவின் இந்த வெளிப்படையான ஆதரவு, ஈரானின் இடைக்காலத் தலைமைக்கு ஒரு பெரும் தெம்பைக் கொடுத்துள்ளது. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சீனாவின் இந்த எச்சரிக்கையை எவ்வாறுக் கையாளப் போகிறார் என்பதே தற்போதைய உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: பத்திரமாக அழைத்து வருவோம்! சவுதியில் சிக்கியுள்ள தலைமை காஜிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல்!