புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது!! பௌத்த போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம்!
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு கிராமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு அமெரிக்காவின் உயரிய இசை விருதான கிராமி வழங்கப்பட்டுள்ளது. 68-வது கிராமி விருது விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் இன்று (பிப்ரவரி 2, 2026) நடைபெற்றது. இந்த விழாவில் உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் பலர் மிடுக்கான உடைகளுடன் கலந்து கொண்டனர்.
தலாய் லாமாவுக்கு சிறந்த ஆடியோ புத்தகம் (Best Audio Book) பிரிவில் விருது அறிவிக்கப்பட்டது. 'மெடிடேஷன்ஸ்: தி ரிப்ளெக்ஷன்ஸ் ஆப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா' (Meditations: The Reflections of His Holiness the Dalai Lama) என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
இந்த ஆல்பத்தில் தலாய் லாமாவின் அமைதி, கருணை, மனிதநேயம் குறித்த போதனைகள் இடம் பெற்றுள்ளன. தலாய் லாமா சார்பாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் விருதை பெற்றுக்கொண்டார்.
பொழுதுபோக்கு துறைக்கு வெளியே உள்ளவர்கள் கிராமி விருது பெறுவது இது முதல் முறை அல்ல. முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா (இரு முறை), மிட்செல் ஒபாமா, ஸ்டீவ் ஜாப்ஸ் (மறைவுக்குப் பின்) போன்றோர் இதற்கு முன் இந்த விருதை பெற்றுள்ளனர். தலாய் லாமாவின் போதனைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளதாக இந்த விருது கருதப்படுகிறது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் ஒரு செல்லாக்காசு..! அதிமுக EX. அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்..!
விருது குறித்து தலாய் லாமா தனது அறிக்கையில் கூறியதாவது: “இந்த அங்கீகாரத்தை நான் நன்றியுடனும் பணிவுடனும் ஏற்றுக்கொள்கிறேன். இதை நான் தனிப்பட்ட சாதனையாக பார்க்கவில்லை. மாறாக, நம் அனைவருக்கும் இருக்கும் உலகளாவிய பொறுப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். அமைதி, கருணை, மனிதநேயம் ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளேன். இதனை உலகளவில் எடுத்துச் செல்ல இந்த விருது உதவும் என்று நான் நம்புகிறேன்.”
தலாய் லாமா சீன அரசின் அழுத்தங்களால் 1959-ல் திபெத்திலிருந்து இந்தியாவுக்கு தஞ்சம் அடைந்தார். அதன் பிறகு அவர் அமைதி, அகிம்சை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மத சகிப்புத்தன்மை ஆகியவற்றை உலகெங்கும் பரப்பி வருகிறார். 1989-ல் அவருக்கு நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது. இப்போது கிராமி விருது மூலம் அவரது ஆன்மீக போதனைகள் இசை உலகிலும் அங்கீகாரம் பெற்றுள்ளன.
இந்த விருது தலாய் லாமாவின் உலகளாவிய செல்வாக்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அமைதி மற்றும் கருணையின் செய்தியை இசை வடிவில் உலகிற்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு இது பெரும் ஊக்கமாக அமைந்துள்ளது. உலகெங்கும் உள்ள பௌத்த பக்தர்களும், அமைதி விரும்பிகளும் இந்த விருதை வரவேற்றுள்ளனர்.
இதையும் படிங்க: அரசு ஊழியர்களை அலறவிட்ட யோகி! 68,000 பேர் சம்பளம் அதிரடியாக ‛கட்’! உ.பி.யில் பரபரப்பு!!