ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!
ஒரே இரவில் ஈரானை அழிக்க முடியும்., ஒருவேளை அந்த இரவு இன்றாக கூட இருக்கலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் மோதல் உலக அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உட்பட பல முக்கிய தலைவர்கள் உயிரிழந்தனர். இந்த நிகழ்வு ஈரான் முழுவதும் 40 நாட்கள் துக்க அறிவிப்புக்கு வழிவகுத்தது.
இதற்கு பதிலடியாக ஈரான், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த பதிலடிகளால் பல நாடுகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
மேலும், அரபிக் கடலில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியதால், வளைகுடா பகுதியிலிருந்து உலக நாடுகளுக்கு செல்லும் கச்சா எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து, பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு போன்ற பொருளாதார பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: $300 பில்லியன் மதிப்பு: அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம்..!! ரிலையன்ஸ் உடன் கைகோர்த்த டிரம்ப்..!!
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறந்துவிடுமாறும், போரை நிறுத்துமாறும் காலக்கெடு விதித்தார். இருப்பினும், ஈரான் இந்த எச்சரிக்கைகளை நிராகரித்துவிட்டது.
எகிப்தில் உள்ள ஈரான் நலன்கள் அலுவலகத் தலைவர் மொஜ்தபா பெர்டோசிபூர் இது குறித்து கூறுகையில், “வெறும் போர்நிறுத்தத்தை மட்டும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். எதிர்காலத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படாது என்ற உத்தரவாதங்கள், போர் சேதங்களுக்கு ஈடுசெய்யும் வழிமுறைகள் உள்ளிட்ட உறுதியான உத்தரவாதங்களுடன் மட்டுமே எந்த ஒப்பந்தத்தையும் ஏற்க முடியும்” என்று தெரிவித்தார்.
நேற்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், ஈரானில் சிக்கிய அமெரிக்க ராணுவ வீரரை வெற்றிகரமாக மீட்டதை பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மேலும், “ஈரான் முழு நாட்டையும் ஒரே இரவில் அழித்துவிட முடியும். அந்த இரவு இன்றைய இரவாகவும் இருக்கலாம்” என்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கு முன்பு தனது ட்ரூத் சோஷியல் தளத்தில், “இன்று செவ்வாய்க்கிழமையுடன் காலக்கெடு முடிகிறது. ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானில் மின் நிலையங்கள் எதுவும் மிஞ்சாது” என்று மிரட்டல் விடுத்திருந்தார். ஈரான் தரப்போ, அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு எதிராக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது குறித்து எந்த சமரசத்துக்கும் தயாராக இல்லை என்று தெரிவித்துள்ளது. இந்த மோதல் தொடர்ந்து நீடித்தால், உலக பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்புகள் தற்போது மங்கலாகவே தெரிகின்றன. உலக நாடுகள் இந்த சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
இதையும் படிங்க: அமெரிக்காவிற்கு நரகத்தின் கதவுகள் திறக்கும்! டிரம்பின் கெடுவை நிராகரித்து ஈரான் கடும் எச்சரிக்கை!