×
 

20 நிமிடங்கள் திகில்.. ஜெபல் அலி கிடங்கில் 7 வெடிச்சத்தங்கள்..!! துபாயில் பரபரப்பு உச்சம்!

நாசாவின் வெப்ப இமேஜரி படங்களில் துறைமுகத்தை ஒட்டிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிகிறது. 

துபாயின் ஜெபல் அலி தொழிற்பகுதியில் அதிகாலையில் தொடர்ச்சியான வெடிச்சத்தங்கள் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக மையமாக விளங்கும் இந்தப் பகுதியில் சுமார் 20 நிமிடங்களுக்குள் குறைந்தது ஏழு வெடிப்புகள் நிகழ்ந்ததாக ஈரானின் மெர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோக்களில் கரும்புகை மற்றும் தீப்பிழம்புகள் தெரிவதால், மத்திய கிழக்கில் அமைதி திரும்பி வருவதாக நம்பிய உலக நாடுகள் மத்தியில் புதிய கவலை எழுந்துள்ளது. வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா-ஈரான் நேரடி மோதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டாலும், ஈரான் ஆதரவு குழுக்களின் தாக்குதல்கள் தொடர்வதால் பதற்றம் குறையவில்லை. இந்தச் சூழலில்தான் ஜெபல் அலி துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள தொழிற்பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. 

எரிபொருள் சேமிப்பு மற்றும் சர்வதேச சரக்கு கையாளுதலுக்கான முக்கிய மையமாக இருக்கும் இப்பகுதியில் ஏற்பட்ட வெடிப்புகள், தாக்குதலா அல்லது விபத்தா என்பது குறித்து இன்னும் தெளிவு ஏற்படவில்லை. அமீரக அதிகாரிகள் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்காமல் மௌனம் சாதித்து வருகின்றனர். உயிரிழப்பு அல்லது காயங்கள் குறித்த தகவல்களும் வெளியாகவில்லை. நாசாவின் வெப்ப இமேஜரி படங்களில் துறைமுகத்தை ஒட்டிய எரிபொருள் சேமிப்பு கிடங்கில் பெரிய தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரிகிறது. 

இதையும் படிங்க: அடேங்கப்பா..!! துபாய் டூரிஸ்ட்களுக்கு ஜாக்பாட்..! சுற்றுலாவை ஊக்குவிக்க சூப்பர் பிளான்..!!

ஏமனிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணை அல்லது ட்ரோன் தாக்குதலே காரணம் என ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன. ஹூதி கிளர்ச்சியாளர்கள் குறிவைத்திருக்கலாம் என்ற உள்ளூர் அறிக்கைகளும் பரவியுள்ளன. சம்பவத்தை வீடியோ எடுத்த இருவர் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் உள்ளது. இதற்கு முன்பும் இதுபோன்ற பதிவுகளுக்கு அமீரகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதேநேரம் ஏமன் தலைநகர் சனாவிலும் வெடிச்சத்தங்கள் கேட்டதாக செய்திகள் வருகின்றன.  

அவை வான்வழித் தாக்குதலா அல்லது உள்நாட்டு மோதலா என்பதில் குழப்பம் நிலவுகிறது. வளைகுடா நாடுகள் உயர் எச்சரிக்கை நிலையில் உள்ளன. உலக வர்த்தகத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த ஜெபல் அலி துறைமுகம் பாதிக்கப்பட்டால் பொருளாதாரத் தாக்கம் ஏற்படக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது. அமீரகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை வரும்வரை இந்த மர்ம வெடிப்புகள் தொடர்பான உண்மை நிலை தெளிவடையாமல் உள்ளது.

இதையும் படிங்க: ஏமாற்றமே..! PM ஶ்ரீ, நவோதயா பள்ளிகள்..! மத்திய அரசு திட்டங்களை காய் நகர்த்தும் தமிழிசை..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share