அணு ஆயுதங்களை அதிகரிக்கும் பிரான்ஸ்! அதிபர் மேக்ரான் அதிரடி உத்தரவு!
உலகில் நிலவி வரும் அசாதாரண போர் சூழல் மற்றும் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு, பிரான்ஸ் தனது அணு ஆயுத இருப்பை அதிகரிக்க போவதாக அதிபர் எமானுவேல் மேக்ரான் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரே அணு ஆயுத வல்லரசான பிரான்ஸ் தனது அணு ஆயுதக் கொள்கையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் வசம் தற்போதுள்ள அணு ஆயுதங்களின் (Warheads) எண்ணிக்கையை அதிகரிக்கப் போவதாக அதிபர் இமானுவேல் மேக்ரான் இன்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
1992-ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரான்ஸ் தனது அணு ஆயுத இருப்பை அதிகரிப்பது இதுவே முதல் முறையாகும். பிரான்ஸின் வடமேற்கு பகுதியில் உள்ள 'ஐல் லாங்' அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் தளத்தில் ஆற்றிய உரையில், நமது தற்காப்புத் திறனை உறுதி செய்யவும், எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ளவும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நான் முடிவு செய்துள்ளேன் என மேக்ரான் தெரிவித்தார்.
இதுவரை பிரான்ஸ் வசம் 290 முதல் 300 அணு ஆயுதங்கள் இருப்பதாகப் பொதுவெளியில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால், இனிவரும் காலங்களில் பிரான்ஸின் அணு ஆயுத இருப்பின் மொத்த அளவை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போவதில்லை என மேக்ரான் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனது ராணுவ பலத்தைப் புதிராக வைத்திருக்கப் பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: மும்பையில் மோடி மேக்ரான் சந்திப்பு...! இந்தியா - பிரான்ஸ் இடையே மெகா ஒப்பந்தங்கள் கையெழுத்து!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல்கள் மற்றும் அமெரிக்காவின் அணுசக்தி குடை மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டிய மேக்ரான், "ஐரோப்பா தனது பாதுகாப்பிற்குத் தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. சுதந்திரமாக இருக்க வேண்டுமானால், நாம் வலிமையானவர்களாக இருக்க வேண்டும்" என முழங்கினார்.
பிரான்ஸின் முக்கிய நலன்களுக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எந்தவொரு நாடும், ஈடுசெய்ய முடியாத பெரும் அழிவைச் சந்திக்க நேரிடும் என அவர் இந்த மேடையில் இருந்து எச்சரிக்கை விடுத்தார்.
மேக்ரானின் இந்த அறிவிப்பு, குறிப்பாக ரஷ்யா மற்றும் ஈரான் விவகாரங்களில் பிரான்ஸின் பிடிமானத்தை அதிகரிக்கும் எனக் கருதப்படுகிறது. இருப்பினும், அணு ஆயுதப் பரவல் தடை ஆர்வலர்களிடையே இது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: மிக மோசமான விளைவுகளைச் சந்திக்கும்...! ஈரானை எச்சரிக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!