×
 

உலகின் டிஜிட்டல் பண பரிவர்த்தனையில் பாதி இந்தியாவில் தான் நடக்கிறது! பிரதமர் மோடி பெருமிதம்!

''இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளை கொண்ட நாடாக உள்ளது'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பாரீஸ்: ஐரோப்பாவின் மிகப் பெரிய தொழில்நுட்ப மாநாடான விவாடெக்கில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா திறந்த சமூகத்தையும், ஏராளமான திறமைசாலிகளையும் கொண்ட நாடு” எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்ற விவாடெக் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது பெருமை அளிப்பதாகக் கூறினார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், 2026ஆம் ஆண்டு இந்தியா-ஐரோப்பா உறவுக்கு சிறப்பான ஆண்டாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

“இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே வர்த்தக ஒப்பந்தம் முடிவடைந்துள்ளது. இது வர்த்தகம், முதலீடு, திறமை, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலாத் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும்” என அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சாமானிய மக்களின் முன்னேற்றமே ஏ.ஐ.,யின் வெற்றி! ஜி-7 மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

கடந்த பத்தாண்டுகளில் இந்தியா தொழில்நுட்பத்தின் உதவியுடன் அபரிதமான மாற்றங்களைச் சந்தித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார். உலகின் மிகப் பெரிய டிஜிட்டல் அடையாள அமைப்பு, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை, நிதி உள்ளடக்கம், கல்வி, டெலிமெடிசின், விவசாயம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் தொழில்நுட்பத்தை பெருமளவில் பயன்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

“யுபிஐ காரணமாக உலக டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பாதி இந்தியாவில் நடைபெறுகிறது. இப்போது பாரீசில் உள்ள ஈபிள் கோபுரத்திலும் யுபிஐ பயன்படுத்தலாம்” என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

ஏஐ தொழில்நுட்பம் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும், இந்தியாவுக்கு ஏஐ என்பது அனைவரையும் உள்ளடக்கியது எனவும் அவர் வலியுறுத்தினார். “இந்தியா திறந்த சமூகம். ஏராளமான திறமைசாலிகள் உள்ளனர். 

விதிமுறைகளை எளிமையாக்கி தொழில் செய்வதை சுலபமாக்குகிறோம். உலகின் மிக மலிவான டேட்டா மற்றும் குறைந்த செலவிலான பசுமை ஆற்றலை இந்தியா வழங்குகிறது” என பிரதமர் மோடி தெளிவுபடுத்தினார்.

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளதாக மாநாட்டில் பங்கேற்றோர் வரவேற்றனர். 

இதையும் படிங்க: போர்களால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு யார் உதவுவது?! ஜி7 மாநாட்டில் பிரதமர் மோடி கேள்வி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share