×
 

அடுத்த 48 மணிநேரம் வெளியே வர வேண்டாம்! ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அவசர எச்சரிக்கை!

ஈரானில் தங்கியுள்ள இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் இருக்கும் இடத்திலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் - இந்தியத் தூதரகம்.

ஈரானுக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்தியத் தூதரகம் (Embassy of India, Tehran) இன்று அதிமுக்கியமான புதிய பாதுகாப்பு வழிமுறைகளை (Advisory) வெளியிட்டுள்ளது.

இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அந்த அவசரச் சுற்றறிக்கையில் ஈரானில் தற்போது தங்கியுள்ள மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணி நிமித்தமாக வந்துள்ள இந்தியர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தாங்கள் தங்கியிருக்கும் இடத்திலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகப் பின்வரும் இடங்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது: மின்சார வாரியங்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு பகுதிகள், ராணுவ நிலைகள் மற்றும் தளவாடங்கள் அமைந்துள்ள இடங்கள், பல அடுக்குக் கட்டிடங்களின் மேல் தளங்கள்.

இதையும் படிங்க: ஒரு நாகரிகமே அழியப்போகிறது! ஈரானுக்கு டிரம்ப் விடுத்த கடைசி எச்சரிக்கை!

தூதரகத்தின் முறையான வழிகாட்டுதல் இன்றி ஈரானின் எந்தவொரு நில எல்லைப் பகுதிகளுக்கும் (Land Borders) செல்ல வேண்டாம். எல்லையைத் தாண்டிச் செல்ல முயலும் போது ஏற்படும் அசம்பாவிதங்களுக்குத் தூதரகம் பொறுப்பேற்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியர்கள் தூதரக அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசர உதவிக்குத் தூதரகம் பின்வரும் எண்களை வழங்கியுள்ளது: மொபைல் எண்கள்: +98 912 810 9115, +98 912 810 9109, +98 912 810 9102. மின்னஞ்சல்: cons.tehran@mea.gov.in.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு விதித்த கெடு இன்று நள்ளிரவுடன் முடிவடைகிறது. இதனால் எந்த நேரமும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்தத் துரித நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்தியக் குடிமக்கள் தங்களது பாஸ்போர்ட் மற்றும் அடையாள ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறும், உள்ளூர் ஊடகச் செய்திகளைக் கூர்ந்து கவனிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதையும் படிங்க: கோமாவில் மொஜ்தபா கமெனி? ஈரானின் புதிய உச்ச தலைவர் குறித்து உளவுத்துறை வெளியிட்ட அதிரடி தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share