×
 

அமெரிக்கா, இஸ்ரேல் கோர தாண்டவம்! ஈரானில் 2,000ஐ தாண்டியது பலி எண்ணிக்கை!

அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதலில், இதுவரையில் ஈரானில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டியதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,000-ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ள நிலையில், பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரானின் உள்கட்டமைப்பு வசதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், ஹார்முஸ் ஜலசந்தியை முடக்கியதன் மூலம் உலக அளவில் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படுத்த ஈரான் முயற்சித்துள்ளது. 

இதனிடையே, போர் நிறுத்தம் செய்வதற்காக 15 அம்ச அமைதி ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இதற்காக 10 நாட்கள் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இருதரப்பினரும் அவ்வப்போது தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: ஈரான் கடற்படை தளபதி பலி உட்பட 1,937 பேர் பலி!! 24,800 பேர் காயம்!! 10,000 இலக்குகள் மீது தாக்கு!

ஈரானுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் டிரம்ப், மறுபுறம் அமெரிக்க காலாட்படையினரை மேற்காசியாவில் குவித்து வருவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா ஈரானில் தரைவழி தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஈரான் பார்லி சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் கடுமையாக எச்சரித்துள்ளார். “அமெரிக்கா ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துவிட்டு, மறுபுறம் ரகசியமாக தரைவழித் தாக்குதலுக்கு தயாராகி வருகிறது. அமெரிக்க வீரர்கள் தரை இறங்கினால், எங்கள் வீரர்கள் அவர்களை அழிக்க தயாராக இருக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த சவுதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து வெளியுறவு அமைச்சர்கள் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் முகாமிட்டுள்ளனர். பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையேயும் பிராந்திய மோதல்கள் குறித்து விரிவான பேச்சு நடைபெற்றுள்ளது.

ஒரு மாதமாக நீடிக்கும் இந்தப் போர் உலகப் பொருளாதாரத்தையும் பெரிதும் பாதித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் உலக நாடுகள் கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொண்டு வருகின்றன. டிரம்ப் முன்மொழிந்த 15 அம்ச அமைதி திட்டம் ஏற்றுக்கொள்ளப்படுமா என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

இதையும் படிங்க: அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் நிறுத்தம்?!! பாகிஸ்தானில் 4 நாடுகளின் அமைச்சர்கள் தீவிர ஆலோசனை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share