அமெரிக்காவுக்கு எதிரான போரில் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி"..!! அறிவித்த ஈரான்..!!
போரின் ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்ற நற்செய்தியை இப்போது மாபெரும் ஈரான் தேசத்திற்கு நாங்கள் அளிக்கிறோம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை அனைத்து கப்பல் போக்குவரத்துக்கும் திறக்குமாறு ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை இரு வாரங்களுக்கு நீட்டித்துள்ளார். மேலும், ஈரான் மீதான குண்டுவீச்சு மற்றும் இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி, இரு வார கால இருதரப்பு போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், “ஈரானுடன் நீண்டகால அமைதி ஏற்படுத்துவதற்கும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலையான அமைதியை உறுதி செய்வதற்கும் நாங்கள் கிட்டத்தட்ட முன்னேற்றம் அடைந்துவிட்டோம். ஈரான் தரப்பில் இருந்து 10 அம்ச முன்மொழிவுகளைப் பெற்றுள்ளோம். இந்தச் சூழலில் தாக்குதல்களை நிறுத்தி இரு வாரங்கள் அவகாசம் அளிப்பது பொருத்தமானது” என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், டிரம்புக்கு நேரடியாக வேண்டுகோள் விடுத்து, ஈரானுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்குமாறு கோரியதே இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு முடிவடைய இருந்த காலக்கெடு, பாகிஸ்தான் தலையீட்டுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING போர் நிறுத்தம்... ஈரானுடன் 2 வார கால போர் நிறுத்தத்தை அறிவித்தார் ட்ரம்ப்...இஸ்ரேல் எடுத்த அதிரடி முடிவு...!
இந்நிலையில், ஈரான் தரப்போ, அமெரிக்காவுக்கு எதிரான போரில் “வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி” பெற்றிருப்பதாக அறிவித்துள்ளது. ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “போர் மூலம் ஈரான் அடைய நினைத்திருந்த கிட்டத்தட்ட அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன. அமெரிக்காவை தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் ஈரான் ஒரு மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் கட்டுப்பாடு, யுரேனியம் செறிவூட்டல் உரிமைகள், அனைத்து பொருளாதாரத் தடைகளின் நீக்கம் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. மேலும், “ஆக்கிரமிப்பை நிறுத்துதல், ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கப் படைகளை முழுமையாக திரும்பப் பெறுதல்” ஆகியவற்றுக்கும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஈரான் உச்ச பாதுகாப்பு கவுன்சில் மேலும் தெரிவித்துள்ளதாவது: “ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்தது. ஆனால், நாங்கள் எங்கள் தேசிய நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் காலக்கெடுக்களை தொடர்ந்து நிராகரித்தோம். எதிரியின் வருத்தமும் விரக்தியும் தெளிவாகத் தெரியும் வரையிலும், நாட்டுக்கு நீண்டகால அச்சுறுத்தலை முழுமையாக அகற்றும் வரையிலும் போர் தொடரும் என்று ஆரம்பத்திலேயே தீர்மானித்தோம்.
இன்று போரின் 40வது நாளில், ஈரானின் வீரமிக்க படைகள் எதிரியை வரலாற்றுச் சிறப்புமிக்க தோல்விக்கு உள்ளாக்கியுள்ளன. இன்னும் போர் முழுமையாக முடிவடையவில்லை. அமெரிக்கா வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த இரு வார போர் நிறுத்தம், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நீண்டகால அமைதிக்கான பாதையைத் திறக்குமா அல்லது தற்காலிக ஓய்வு மட்டுமேயா என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: ஒரு நைட் போதும் ஈரானை அழிக்க... அது இன்னைக்கா கூட இருக்கலாம்..!! வார்னிங் கொடுக்கும் டிரம்ப்..!!