×
 

காமெனி ஸ்டைலில் அதிரடி காட்டிய பெண் ஆங்கர்! இஸ்ரேல் குண்டுக்கு அஞ்ச மாட்டோம் என ஆக்ரோஷம்..!

ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் ஹெஸ்புலா அமைப்பின் முன்னாள் தலைவன் ஹசன் நஸ்ரல்லா போல செய்தி வாசிக்கும் இமானியின் ஸ்டைல் பாராட்டை குவிக்கிறது.

தங்களுக்கு எதிராக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக கூறி ஈரான் மீது கடந்த 13-ந்தேதி திடீரென இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. தலைநகர் டெஹ்ரான் மற்றும் அதை சுற்றியுள்ள ராணுவ நிலைகள் மற்றும் முக்கியமான அணு ஆயுத கட்டமைப்புகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசியது. 

இஸ்ரேலின் இந்த பயங்கர தாக்குதலில் ஈரானின் ராணுவ தளபதிகள், அணு ஆயுத விஞ்ஞானிகள் என பாதுகாப்பு நிபுணர்கள் கொல்லப்பட்டனர். அத்துடன் வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் ராணுவ தளவாடங்களும் மிகப்பெரும் சேதமடைந்தன. மேலும் டெஹ்ரானில் உள்ள இயற்கை எரிவாயு சுத்திகரிப்பு ஆலை மற்றும் எண்ணெய் கிடங்கையும் தாக்கியது. இந்த எண்ணெய் கிடங்கு தொடர்ந்து பற்றி எரிகிறது. இதனால் ஈரானில் பரவலாக பெருத்த சேதம் விளைந்துள்ளது.

இதற்கிடையே இஸ்ரேல் மீது ஈரானும் பதிலடி தாக்குதலை தொடங்கியது. ஜெருசலேம், டெல் அவிவ் உள்ளிட்ட இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறி வைத்து ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கொண்டு தாக்கி வருகிறது. இதில் பலவற்றை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து தாக்கி அழித்த நிலையில், அதையும் தாண்டி சில ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தங்கள் இலக்கை தாக்கின. 

இதையும் படிங்க: ஜி7 மாநாட்டில் இருந்து பாதியில் வெளியேறிய ட்ரம்ப்.. ஈரானுக்கு வார்னிங் மெசேஜ்.. துவங்குகிறதா போர்.?

4-வது நாளாக தொடர்ந்த மோதல் இரு நாடுகளுக்கு இடையேயான இந்த மோதல் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இஸ்ரேலின் போர் விமானங்கள் ஈரானுக்குள் நூற்றுக்கணக்கான கி.மீ. தூரத்துக்கு உள்ளே வந்து தாக்குதலை நடத்தி வருகின்றன.

தொழில்நுட்பத்தில் முன்னோடியாக விளங்கும் இஸ்ரேல்,  ஈரானில் தொடர்ச்சியாக குண்டு மழை பொழிந்து வருகிறது. நேற்று தலைநகர் தெஹ்ரானில் உள்ள அரசு டிவி ஸ்டேஷன் மீதும் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.  அப்போது, ஆங்கர் சஹர் இமானி (Sahar Imani) நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்தார்.


இஸ்ரேலை ஈரான் அரசு எச்சரிக்கும் செய்தியை அவர் ஆக்ரோஷமாக வாசித்துக் கொண்டிருக்கும் போது டிவி ஸ்டேஷன் மீது ஏவுகணை விழுந்து வெடித்தது. 

ஆங்கர் சஹர் இமானி இருந்த ஸ்டுடியோவும் முற்றிலும் சேதமடைந்தது. எங்கும் புகைமயமாகியிருந்தது. அதிர்ச்சியடைந்த இமானி ஸ்டுடியோவைவிட்டு வெளியேறினார். ஆனாலும், மனம் தளராமல் சிறிது நேரத்திலேயே இன்னொரு ஸ்டுடியோவில்  இருந்து செய்தி வாசிப்பு பணியை தொடர்ந்தார். அவரது கடமை உணர்வையும் தேசப்பற்றையும்  ஈரான் தேசமே பாராட்டுகிறது.

ஒற்றை விரலை காட்டி இஸ்ரேலை எச்சரித்தபடி செய்தி வாசிக்கும் இமானியின் ஸ்டைலுக்கு பாராட்டு மழை குவிகிறது. காரணம், ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் ஹெஸ்புலா அமைப்பின் முன்னாள் தலைவன் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் இப்படித்தான் விரலை உயர்த்தி ஆவேசமாக பேசுவார்கள்.
மூவரது போட்டோக்களையும் ஒன்றாக பதிவிட்டு, ஈரான் நாட்டு பெண்களின் தைரியத்துக்கு உதாரணம் என, சஹர் இமானியை புகழ்ந்து தள்ளுகின்றனர். 

உலகம் முழுக்க இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 2010ம் ஆண்டில் ஆங்கர் பணியை  (Sahar Imani) துவங்கினார். பிறகு அரசு டிவியில் பணிக்கு சேர்ந்தார். பெரியளவில் மேக்கப் போட மாட்டார்.  அரபு மொழியை தெளிவாக உச்சரித்து செயதிகளை வழங்குவதில் திறமையாக செயல்பட்டு  மிக விரைவிலேயே பிரபலமானார். இஸ்ரேல் குண்டுபோட்ட பிறகும்  துணிச்சலாக பணியை தொடர்ந்து செய்ததன்மூலம் புகழேணியின் உச்சிக்கு சென்றுள்ளார். இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் அரசு டிவி நிறுவனம் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஈரான் மக்களிடம் உண்மைகளை போய்ச் சேர விடாமல் தடுக்க டிவி ஸ்டேஷன் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. இதுபோன்ற தாக்குதல் மூலம் ஈரானிய பத்திரிகையாளர்களின் மனஉறுதியை உடைக்க முடியாது என ஈரான் அரசு டிவி நிறுவனம் கூறியது.

இதையும் படிங்க: இனி எங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும்! இஸ்ரேலின் அதிதீவிர மிரட்டலால் கதிகலங்கும் ஈரான்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share