ஈரானின் தொடர் தாக்குதல்..!! சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிக மூடல்..!!
ஈரான் டிரோன் தாக்குதல் எதிரொலியாக சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய இராணுவ மோதல் உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது தொடங்கிய பெருமளவிலான வான்வழித் தாக்குதல்கள், அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி காமேனியை உட்பட பல முக்கியத் தலைவர்களை கொன்றுள்ளன. இத்தாக்குதலில் காமேனியின் குடும்ப உறுப்பினர்கள் சிலரும், இராணுவ மற்றும் அரசியல் உயரதிகாரிகள் பலரும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 200-க்கும் மேற்பட்டோர் இறந்திருப்பதாக ஈரானிய அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. இது ஈரானின் ஆட்சி அமைப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் வேகமாகவும் விரிவாகவும் பதில்தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நெருங்கிய நேச நாடுகளான வளைகுடா பகுதி நாடுகளை இலக்காகக் கொண்டு ஈரான் டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள், விமான நிலையங்கள் மற்றும் சில சிவில் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
இதையும் படிங்க: ஆத்திரம் அடங்காத ஈரான்..!! தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. ஜெருசலேம் மீதும் அட்டாக்..!!
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் அங்கு தீப்பிடித்து எரிந்துள்ளது. தூதரக வளாகத்தில் இருந்து புகை மண்டலமாகக் காணப்படுவதால், அங்கிருந்த அமெரிக்கப் பணியாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல்கள் நடந்த நிலையில், இப்போது தூதரகத்தையும் இலக்காக்கியுள்ளது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
பஹ்ரைனில் ஈரானின் தாக்குதல்கள் காரணமாக சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மக்கள் வீடுகளில் தங்கி பாதுகாப்பாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள அமெரிக்க 5வது கடற்படைத் தலைமையகம் உள்ளிட்ட இலக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் அமைந்துள்ள சவுதி அரம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் ஆலையில் தீப்பிடித்தது என்றாலும், விரைவாக கட்டுப்படுத்தப்பட்டதாக சவுதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இது உலக எண்ணெய் சந்தையில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடும். இந்தத் தாக்குதல்கள் அனைத்தும் வளைகுடா பகுதியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளன. பல நாடுகள் தங்கள் வான்வெளியை மூடியுள்ளன, விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் இணைந்து ஈரானின் தாக்குதல்களை கண்டித்து, தற்காப்பு உரிமையை உறுதிப்படுத்தியுள்ளன.
மேலும் தாக்குதல்கள் தொடர்ந்தால் பதிலடி கொடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த மோதல் மத்திய கிழக்கு முழுவதும் பரவக்கூடிய அபாயத்தை உருவாக்கியுள்ளது. உலக நாடுகள் அனைத்தும் இதை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன.
இதையும் படிங்க: ஈரானின் இடைக்கால உச்ச தலைவர் நியமனம்! கமேனி மறைவுக்கு பிறகு அலிரேசா அராஃபி தலைமையில் 3 பேர் குழு!