தெரியாம தொட்டுட்டீங்க.. பேரழிவு காத்திருக்கிறது.. அமெரிக்காவுக்கு கமேனி பகிரங்க எச்சரிக்கை..!
அமெரிக்காவுக்கு பேரழிவு காத்திருக்கிறது என ஈரான் தலைவர் கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தங்களுக்கு எதிராக அணு ஆயுதம் தயாரிப்பதாக கூறி இஸ்ரேல் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தியது. ஈரான் இதற்கு தக்க பதிலடி கொடுத்தது. இப்போது இரு நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்துள்ளது. ஏவுகணை, டிரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஈரான் கடும் தாக்குதலை தொடுத்தது.
இஸ்ரேல் ஈரானின் எண்ணெய் வயல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பதில் தாக்குதலை ஈரானும் நடத்தி வருகிறது. அலை அலையாக ட்ரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் எனப்படும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலுக்குள் ஏவியது. ஈரானின் பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் கவசங்கள் தடுக்கின்றன. அதை மீறி விழுந்த ஏவுகணைகள் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட பல நகரங்களை தாக்கியுள்ளன.
இதையும் படிங்க: அமெரிக்காவில் மீண்டும் டிக்டாக்.. 90 அவகாசம் அளித்து கருணை காட்டிய ட்ரம்ப்..!
ஆபரேஷன் ரைசிங் லயன் (எழுச்சி பெறும் சிங்கம்) என்ற பெயரில் ஈரான் மீது கடந்த வாரம் இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தது. இதற்கு ஈரானும் தக்க பதிலடி கொடுத்தது. ஈரான் "ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-3" என்ற பெயரில் இஸ்ரேல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதனால் ஈரான், இஸ்ரேல் பிராந்தியத்தில் மீண்டும் பதற்றம் தொற்றிக் கொண்டது.
இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்தது. ஈரான் மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் தனிப்பட்ட முறையில் ஒப்புதல் தெரிவித்துவிட்டதாகவும், எனினும், இறுதி உத்தரவை அவர் இன்னும் பிறப்பிக்கவில்லை என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஈரான் தனது அணு ஆயுத திட்டத்தை கைவிடுகிறதா என்பதை பொறுத்திருந்து பார்க்க இருப்பதாகவும், அதன்பிறகு ட்ரம்ப் இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஈரான் மீது நடந்த தாக்குதல் வெற்றியடைந்து உள்ளது. உலகில் வேறு எந்த ராணுவமும் இதுபோன்று செய்தது இல்லை என தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஈரானின் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியது ஈரானுக்கு ஆத்திரம் ஏற்படுத்தி உள்ளது. இதனால், அமெரிக்காவுக்கு முன் எப்போதும் இல்லாத வகையில் பேரழிவு காத்திருக்கிறது என்றும் அமெரிக்கா தொடங்கிய போரை நாங்கள் முடித்து வைப்போம் என்றும் ஈரான் நாட்டின் தலைவர் அயோத்துல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஈரான் தலைவர் கமேனியின் பிரதிநிதி கூறும்போது, பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை தளம் மீது தாக்குவோம். தாமதமின்றி உடனே தாக்குதல் நடத்த இதுவே சரியான தருணம் என தெரிவித்து உள்ளார். ஆனால், ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், அதனை விட அதிக பலத்துடன் நாங்கள் தாக்குவோம் என டிரம்பும் எச்சரித்து உள்ளார்.
ஈரானிய ஆதரவு பெற்ற போராளி அமைப்புகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் எழுந்துள்ள சூழலில், பல்வேறு நாடுகளில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மற்றும் தூதரக பகுதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவுக்கு ஆதரவாக அனைத்து வகையிலும் துணை நிற்போம் என இஸ்ரேலும் தெரிவித்து உள்ளது. இதுவரை ஈரான் நடத்திய தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட 470 டிரோன்களை தாக்கி அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியுள்ளது. இதனால், அமெரிக்க ஆதரவுடன் இஸ்ரேல், ஈரான் நாட்டை எதிர்கொள்ள தயாராக உள்ளது என்று கூறினார்.
இதையும் படிங்க: காமெனி உயிர்தான் குறி! ட்ரம்ப், நெதன்யாகு முதல் இஸ்ரேல் அமைச்சர் வரை ஓபன் ஸ்டேட்மெண்ட்..!