×
 

6 ஏர்போர்ட் மீது அட்டாக்.. இறங்கி அடிக்க துவங்கிய இஸ்ரேல்.. ஈரான் மீது குண்டு மழை..!

ஈரான் நாட்டில் 6 விமான நிலையங்களில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி உள்ளது. ஈரான் நாட்டின் 15 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல், ஈரான் இடையிலான போர் இன்று 11வது நாளாக  தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்காவும் ஈரான் மீது  அதிரடி தாக்குதலை நடத்தியது. ஈரான் நாட்டிலுள்ள  ஃபோர்டோ (Fordow), நடான்ஸ் (Natanz), இஸ்பஹான் (Esfahan) அணு சக்தி கூடங்களை அமெரிக்க போர் விமானங்கள் குண்டு வீசி தாக்கின. அந்த 3 இடங்களிலும் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாத அளவுக்கு முற்றிலும் அழித்து விட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார். 

ஆனால், அணு உலைகளில் பாதிப்பு பெரியளவில் இல்லை என ஈரான் சொல்கிறது. அமெரிக்காவின் தாக்குதல் ஈரான் இஸ்ரேல் போரில் திருப்பு முனையாக பார்க்கப்படுகிறது. ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் போரில் குதித்தது இஸ்ரேல் ராணுவத்துக்கு  புதிய உற்சாகத்தை அளித்துள்ளது. ஈரானில் இன்று பல இடங்களில் வான் வழி தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியது. 

மேற்கு, கிழக்கு, மத்திய ஈரானில் உள்ள  6 விமான நிலையங்களை குறி வைத்து  இஸ்ரேல் வான் வழி தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலில் 6 விமான நிலையங்களில் உள்ள ஓடுபாதைகளை அழித்து விட்டதாக  இஸ்ரேல் ராணுவம் கூறியது. தாக்கப்பட்ட 6 விமான நிலையங்களின் வரைபடத்தை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ஹோர்முஸ் நீரிணை மூடலால் இந்தியாவுக்கு பாதிப்பு? பெட்ரோல், டீசல் விலை எகிறுமா?

தெஹ்ரானில் (Tehran) உள்ள மெஹ்ராபாத் (Mehrabad) உள்நாட்டு விமான நிலையம் மற்றும் மஷாத் (Mashhad),  டெஸ்ஃபுல் (Dezful) நகரங்களில் உள்ள விமான நிலையங்களில்  தாக்குதல் நடத்தப்பட்டதன் வீடியோ மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் விமானப்படை  ஆதாரமாக வெளியிட்டுள்ளது.

இதுதவிர, விமானங்கள் பறக்கும்போதே எரிபொருளை நிரப்பும் திறன் கொண்ட ஒரு விமானம், ஈரான் விமானப்படைக்கு சொந்தமான F-14, F-5 போர் விமானங்கள் மற்றும் AH-1 கோப்ரா அட்டாக் ெஹலிகாப்டர் உள்ளிட்ட 15க்கு மேற்பட்ட போர் விமானங்களை தாக்கி அழித்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது.

மேற்கு ஈரானில் உள்ள (Kermanshah) கெர்மான்ஷா ஏவுகணை ஏவு தளத்தையும் இஸ்ரேல் விமானங்கள் தாக்கி அழித்தது. இஸ்ரேலை தாக்குவதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ஏவுகணைகளையும் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் மூலம் அழித்தது. கெர்மான்ஷா தளத்தில் இருந்துதான் டெல்அவிவ்,  ஹைஃபா உள்ளிட்ட  இஸ்ரேல் நகரங்கள் மீது ஈரான் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வந்தது. கெர்மான்ஷா ஏவுதளத்தை இஸ்ரேல் அழித்திருப்பது ஈரானுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஈரான் வான்வெளிக்குள் புகுந்து தாக்கியதன்மூலம் மீண்டும் ஒருமுறை இஸ்ரேல் தனது வான்வழி போர்த்திறனை நிரூபித்துக் காட்டியுள்ளது என, இஸ்ரேல் விமானப்படை வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது. ஈரானும் இஸ்ரேல் மீது தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இன்றும் பல ஏவுகணைகளை இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவியது. பெரும்பாலான ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் நடுவானிலேயே சுட்டு வீழ்த்தின. 

தெற்கு இஸ்ரேலில் மின்சார கட்டமைப்பை ஒரு ஏவுகணை தாக்கியது. இதனால் இஸ்ரேலின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாளில் ஈரான் தரப்பில் 600க்கு மேற்பட்டவர்களும் இஸ்ரேல் தரப்பில் 30க்கு மேற்பட்டவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.

இதையும் படிங்க: தொடர்ந்து கேட்கும் குண்டு சத்தம்.. நிலவும் போர்ப்பதற்றம்.. இஸ்ரேலில் இருந்து 160 இந்தியர்கள் மீட்பு..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share