தாறுமாறாக உயரப்போகும் பெட்ரோல், டீசல் ரேட்! இஸ்ரேல் - ஈரான் சண்டையால் டாப் கியரில் கச்சா எண்ணெய்..!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதால், கச்சா எண்ணெய் விலை 12 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயரும் வாய்ப்பு உள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. அணுசக்தி திட்ட மையங்கள் மற்றும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதல் பற்றி கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், முன் எப்போதையும் விட இன்று, ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் ஈரான் கையில் இருப்பது, இஸ்ரேலுக்கும் இந்த உலகுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
குடிமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையை நிறைவேற்றுவதை தவிர இஸ்ரேல் அரசுக்கு வேறு வழியில்லை கடந்த காலத்தில் செய்தது போல, அனைத்து இடங்களிலும் அதன் கடமையை செய்யும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஈரானில், அணுசக்தி செறிவூட்டல் திட்டம், அணு ஆயுதமயமாக்கல் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் மையத்தை குறி வைத்து தாக்கினோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இஸ்ரேல் - ஈரான் சண்டையில் நழுவிய அமெரிக்கா!
இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காகவும், ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கத்துடனும், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ Operation Rising Lion ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இந்த அச்சத்தை நீக்க இந்த ஆபரேஷன் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் என்று நெதன்யாஹு எச்சரித்துள்ளார்.
மேலும், இஸ்ரேலின் தாக்குதலுக்கு வருந்தத்தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை அறிக்கை வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரான் எப்போது வேண்டுமானாலும் பதில் தாக்குதல் நடத்தலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கி உள்ளது. கச்சா எண்ணெய் விலை 12%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 77 டாலர் என்ற நிலையை எட்டி உள்ளது. போர் பதற்றம் அதிகரிக்கும் பட்சத்தில் விலை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது: உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளரான ஈரான் மீதான இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவது உற்பத்தியை பாதிக்கும். விலையும் தாறுமாறாக உயரும். இதன் தாக்கம் உலகம் முழுவதும் இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரும் சூழல் உருவாகும்.
இதையும் படிங்க: இஸ்ரேல் ஈரான் சண்டையால் இந்தியாவில் பாதிப்பு.. தாயகம் திரும்பும் விமானங்கள்..!