எங்களுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை! இஸ்ரேல் - ஈரான் சண்டையில் நழுவிய அமெரிக்கா!
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ராணுவத்தின் போர் விமானங்கள், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி உள்ளன. அணுசக்தி திட்ட மையங்கள் மற்றும் ஈரான் ராணுவ தளங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.
இந்த தாக்குதல் பற்றி கூறியுள்ள இஸ்ரேல் ராணுவம், முன் எப்போதையும் விட இன்று, ஈரான் அணு ஆயுதங்கள் பெறுவதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் ஈரான் கையில் இருப்பது, இஸ்ரேலுக்கும் இந்த உலகுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.
குடிமக்களை பாதுகாக்க வேண்டிய கடமையை நிறைவேற்றுவதை தவிர இஸ்ரேல் அரசுக்கு வேறு வழியில்லைகடந்த காலத்தில் செய்தது போல, அனைத்து இடங்களிலும் அதன் கடமையை செய்யும் என்று இஸ்ரேல் ராணுவம் தெரிவித்து உள்ளது. ஈரானில், அணுசக்தி செறிவூட்டல் திட்டம், அணு ஆயுதமயமாக்கல் திட்டம், பாலிஸ்டிக் ஏவுகணை திட்டங்களின் மையத்தை குறி வைத்து தாக்கினோம் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: இஸ்ரேல் ஈரான் சண்டையால் இந்தியாவில் பாதிப்பு.. தாயகம் திரும்பும் விமானங்கள்..!
இஸ்ரேலின் உயிர்வாழ்விற்காகவும், ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கத்துடனும், ‘ஆபரேஷன் ரைசிங் லையன்’ Operation Rising Lion ராணுவ நடவடிக்கையை தொடங்கி உள்ளோம். இந்த அச்சத்தை நீக்க இந்த ஆபரேஷன் எத்தனை நாட்கள் ஆனாலும் தொடரும் என்று நெதன்யாஹு எச்சரித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் எங்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று அமெரிக்கா கூறியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு செயலர் மார்கோ ரூபியோ கூறும்போது, ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்த தாக்குதலுக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க படைகளின் பாதுகாப்பு பற்றியே எங்களின் கவலை உள்ளது. அமெரிக்க நிலைகளையோ, அமெரிக்க படைகளையோ ஈரான் இலக்காக வைக்கக் கூடாது.
தங்களின் பாதுகாப்புக்காகவே இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவிடம் இஸ்ரேல் தெரிவித்துள்ளது, இவ்வாறு கூறினார். அதேபோல, ஐ.நா., கூறியிருப்பதாவது; மத்திய கிழக்கு நாடுகளில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்கு ஐ.நா.,பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஐ.நா.,வின் சர்வதேச சட்டதிட்டங்களை உறுப்பு நாடுகள் கடைபிடிக்க வேண்டும். இருதரப்பினரும் தீவிர தாக்குதலை கைவிட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
அணு ஆயுத பரவல் சட்ட உடன்படிக்கையை மீறி ஈரான், அணு ஆயுதங்கள் தயாரிப்பதில் ரகசியமாக செயல்பட்டு வருகிறது. சர்வதேச அணுசக்தி முகமை 2003ல் ஈரானில் ஆய்வு செய்து இதை கண்டுபிடித்தது. விளக்கம் கேட்டும் ஈரான் அசையவில்லை. இதனால், அந்நாட்டுக்கு எதிராக சர்வதேச அணுசக்தி முகமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அணுசக்தி தொடர்பான பொறுப்புகளை ஈரான் நிறைவேற்ற தவறிவிட்டதாக சர்வதேச அணுசக்தி முகமை குற்றம் சாட்டி உள்ளது. அடுத்ததாக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பரிந்துரைக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.
இது தவிர, அமெரிக்கா – ஈரான் இடையே அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சு நடந்து வந்தது. அதில் உடன்பாடு ஏற்படும் நம்பிக்கை இல்லை என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். நல்ல முடிவு ஏற்படாவிட்டால், ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தும் என எச்சரித்து இருந்தார். இஸ்ரேலும் எச்சரித்து இருந்தது. இச்சூழலில்தான், ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: 'Operation Rising Lion' ஈரானை தடுத்து நிறுத்தணும், இல்லனா..! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை..!