ஈரான் -இஸ்ரேல் , அமெரிக்கா போர்! மேற்காசியாவில் நிலவரம் என்ன? பார்லி.,யில் ஜெய்சங்கர் விளக்கம்!
மேற்காசிய பிரச்னைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண வேண்டும் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
புதுடில்லி, மார்ச் 9: ஈரான்-இஸ்ரேல் மோதல் உள்ளிட்ட மேற்காசிய (மிடில் ஈஸ்ட்) பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தீவிரப் போர் நிலைமை குறித்து வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று ராஜ்யசபாவில் விரிவான விளக்கம் அளித்தார். இந்தப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மற்றும் இராஜதந்திரம் மூலமே தீர்வு காண முடியும் என்று அவர் வலியுறுத்தினார். இந்தியா தொடர்ந்து இதை வலியுறுத்தி வருவதாகவும் கூறினார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று காலை தொடங்கியது. லோக்சபாவில் மறைந்த எம்பிக்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு அவை ஒத்திவைக்கப்பட்டது. ராஜ்யசபாவில் இந்திய டி-20 கிரிக்கெட் அணியின் சாம்பியன் பட்டத்துக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
அதன் பிறகு, ஈரான்-இஸ்ரேல் மோதல் காரணமாக வளைகுடா நாடுகளில் தவித்து வரும் இந்தியர்களின் நிலை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி எழுப்பினார். இதையடுத்து ஜெய்சங்கர் விரிவாக பதிலளித்தார்.
இதையும் படிங்க: கமேனியின் அஞ்சலிக்கும் சிக்கல்!! ஓயாத தாக்குதல்!! இறுதி சடங்கை ஒத்திவைத்தது ஈரான்!!
மேற்காசிய நிலவரம் கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெய்சங்கர், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து இதை கண்காணித்து வருவதாகவும், பதட்டங்களை தணிக்கவும் அடிப்படை பிரச்னைகளை தீர்க்கவும் இந்தியா வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
இது வெறும் ஈரான்-இஸ்ரேல் அல்லது அமெரிக்கா சம்பந்தப்பட்ட போர் மட்டுமல்ல; அந்த பிராந்தியத்தை சுற்றியுள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜெய்சங்கர் கூறினார். வளைகுடா நாடுகளில் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வேலை செய்து வருகின்றனர்.
ஈரானில் படிப்பு அல்லது வேலைக்காக சில ஆயிரம் இந்தியர்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதில் அரசு உறுதியாக உள்ளது. தொடர்ந்து தூதரகங்கள் மூலம் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறப்பு விமானங்கள் மூலம் தேவைப்படுபவர்களை மீட்டு வரும் பணிகள் நடைபெறுகின்றன என்றார்.
அனைத்து தரப்பினரும் நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும் என்று ஜெய்சங்கர் வலியுறுத்தினார். போர் முடிவுக்கு வர வேண்டும் என இந்தியா விரும்புவதாகவும், பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த அமர்வு ஏப்ரல் 2 வரை நீடிக்கிறது. மேற்காசிய போர் தொடர்பான இந்த விளக்கம் நாட்டு மக்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: மத்திய கிழக்கில் போர் பதற்றம்!! 9,000 பேர் நாடு திரும்பியாச்சு!! அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு!!