ஈரானிலிருந்து உடனே வெளியேறுங்க.. அமெரிக்க அரசு அவசர அறிவிப்பு..!! காரணம் என்ன..??
ஈரானில் உள்ள அமெரிக்க குடிமக்கள், உடனடியாக அங்கு வந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
ஈரானில் தங்கியுள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் அதன் மெய்நிகர் தூதரகம் (Virtual Embassy) தீவிர அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. வெளியான பாதுகாப்பு எச்சரிக்கையில், "இப்போதே ஈரானை விட்டு வெளியேறுங்கள். அமெரிக்க அரசின் உதவியை எதிர்பார்க்காமல் சொந்தமாக வெளியேறும் திட்டத்தை வைத்திருங்கள்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்தாகும் அபாயம், இணையத் தடை, போக்குவரத்து சிக்கல்கள் ஆகியவற்றால் நிலைமை சிக்கலாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. தரை வழியாக ஆர்மீனியா அல்லது துருக்கி செல்லும் வழிகளை பயன்படுத்தலாம் என்றும், பாதுகாப்பு உறுதியாக இருந்தால் மட்டுமே அவ்வாறு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எங்களை சீண்டினால் பிராந்திய போராக மாறும்! அமெரிக்க அதிபர் டிரம்புக்கு ஈரான் உச்ச தலைவர் அலி காமேனி கடும் எச்சரிக்கை!
இந்த எச்சரிக்கை ஈரானுடனான அமெரிக்காவின் அதிகரித்து வரும் பதற்றத்தின் பின்னணியில் வெளியாகியுள்ளது. அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்கா, ஈரானின் அணு திட்டத்தை கடுமையாகக் கட்டுப்படுத்தும் புதிய ஒப்பந்தத்தை வலியுறுத்தி வருகிறது.
ஈரான் தனது அணு தொழில்நுட்பத்தை தற்போது மின்சார உற்பத்திக்காக மட்டுமே பயன்படுத்துவதாகக் கூறினாலும், அதை மேம்படுத்தி அணு ஆயுதம் உருவாக்கும் அபாயம் உள்ளதால், அமெரிக்கா "பூஜ்ஜிய அணு திறன்" (zero nuclear capability) உள்ள ஒப்பந்தத்தை விரும்புகிறது. இதற்காக ஓமன் நாட்டில் உள்ள பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ள நிலையில், இரு தரப்பும் அதிகபட்ச கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
இதற்கிடையே, பெர்சியன் வளைகுடாவில் அமெரிக்காவின் மிகப்பெரிய போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் (USS Abraham Lincoln) மற்றும் அதன் தாக்குதல் குழு (Carrier Strike Group) நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணு சக்தி கொண்ட கப்பலில் 90-க்கும் மேற்பட்ட போர் விமானங்கள் உள்ளன. சமீபத்தில் ஈரானிய ட்ரோன் ஒன்று கப்பலை நெருங்கியதால் அமெரிக்க போர் விமானம் அதை சுட்டு வீழ்த்திய சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா ஈரான் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதற்கான ரகசிய திட்டங்களை ஆலோசித்து வருவதாகவும், ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் பலமான நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாகவும் டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஈரானில் நடைபெறும் பெரும் போராட்டங்கள், அரசின் கடுமையான ஒடுக்குமுறை ஆகியவை இந்தப் பதற்றத்துக்கு காரணமாக உள்ளன.
ஈரான் அணு ஒப்பந்தத்தை மீறி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில், பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறாவிட்டால் பெரிய அளவிலான மோதல் ஏற்படலாம் என்ற அச்சம் உலக அளவில் எழுந்துள்ளது.இந்த நிலையில், அமெரிக்காவின் "உடனடி வெளியேறு" அறிவுறுத்தல் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது வெறும் வழக்கமான எச்சரிக்கை அல்ல; தற்போதைய ராணுவ நகர்வுகள், டிரம்பின் கடுமையான நிலைப்பாடு ஆகியவை சேர்ந்து மிகுந்த பதற்றத்தை உருவாக்கியுள்ளன. ஈரான் இந்த அழுத்தங்களுக்கு எதிர்வினையாற்றி வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் என்ன நடக்கும் என்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதையும் படிங்க: போர் பதற்றம்..!! ஈரானை ரவுண்டுகட்டிய அமெரிக்கா..!! இராணுவத்தை குவிக்கும் டிரம்ப்..!!