எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போனவர்! 6 நாட்கள் கழித்து இறுதி சடங்கு செய்யும்போது திரும்பி வந்ததால் பரபரப்பு!
எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன வழிகாட்டி ஒருவர், உணவு,தண்ணீர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் இன்றி, 6 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியடையச் செய்துள்ளது.
உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன மலையேற்ற வழிகாட்டி ஒருவர், ஆறு நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் ஆச்சரியத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த தவா ஷெர்பா என்ற அனுபவம் வாய்ந்த வழிகாட்டி, போலந்து நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீரருடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தை அடைய முயன்றார். கடுமையான வானிலை மற்றும் சவாலான சூழ்நிலைகளால் அந்த முயற்சி வெற்றியடையவில்லை. இதையடுத்து இருவரும் மீண்டும் கீழே திரும்பத் தொடங்கினர்.
அப்போது கேம்ப்-3 மற்றும் கேம்ப்-4 பகுதிகளுக்கு இடையே தவா ஷெர்பா திடீரென காணாமல் போனார். மே 29-ம் தேதி அவரை கடைசியாக பார்த்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருடன் சென்ற மலையேற்ற வீரர் பாதுகாப்பாக முகாமுக்கு திரும்பிய நிலையில், தவா ஷெர்பா மட்டும் திரும்பவில்லை.
இதையும் படிங்க: தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!
இதையடுத்து அவரைத் தேடும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் ஆரம்ப கட்ட தேடுதல்களில் எந்த தகவலும் கிடைக்காததால், அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. அவரது குடும்பத்தினரும் நம்பிக்கையை இழந்து பாரம்பரிய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை தொடங்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், எவரெஸ்ட் மலையின் கீழ்பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த குழுவினர், பனிப்பாறை பகுதியில் ஒருவர் சிரமத்துடன் நகர்ந்து கொண்டிருப்பதை கவனித்தனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் தவா ஷெர்பா என்பது தெரியவந்தது.
கடுமையான சோர்வு, காயங்கள் மற்றும் உடல்நல பாதிப்புகளுடன் இருந்த அவரை மீட்டு பாதுகாப்பாக கீழே கொண்டு வந்தனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவுக்கு அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
உணவு, தண்ணீர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் எதுவுமின்றி ஆபத்தான பனிப்பாறை பகுதியில் கிட்டத்தட்ட ஆறு நாட்கள் உயிர் பிழைத்திருப்பது மிக அரிய சம்பவம் என மலையேற்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த அதிசயமான மீட்பு சம்பவம் தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. மனித மன உறுதியும் உயிர் பிழைக்கும் போராட்டமும் எவ்வளவு வலிமையானது என்பதை தவா ஷெர்பாவின் அனுபவம் மீண்டும் நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: அண்ணாமலை இயக்கத்தில் குவியும் இளைஞர்கள்! ஒரு மணி நேரத்தில் லட்சத்தை கடந்த உறுப்பினர் சேர்க்கை!!