தரையிரங்கும் போது தீப்பற்றிய விமானம்!! சக்கரத்தில் பற்றி எரிந்த தீ! அச்சத்தில் அலறிய பயணிகள்!
காத்மாண்டு விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் மற்ற விமானங்களின் சேவையில் சிறிது தாமதம் ஏற்பட்டது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இன்று காலை துருக்கி ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் பின்சக்கரத்தில் தீப்பற்றியதால் சில நிமிடங்கள் பதற்றமான சூழல் நிலவியது. ஆனால் விமானத்தில் இருந்த 288 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இருந்து நேபாளத்தின் காத்மாண்டுவுக்கு வந்த துருக்கி ஏர்லைன்ஸ் ஏர்பஸ் ரக விமானம் இன்று காலை தரையிறங்க முயன்றது. அப்போது விமானத்தின் வலது பக்க பின்சக்கரத்தில் திடீரென தீப்பற்றியதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீ வெளியேறியது கவனிக்கப்பட்டதும் விமான நிலைய அவசரகால குழுவினர் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
விமானத்தில் இருந்த 277 பயணிகள் மற்றும் 11 விமான ஊழியர்கள் உடனடியாக அவசர வெளியேற்ற நடைமுறையின் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஞானேந்திர புல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பழனிசாமி பிடிவாதத்தால் மொத்தமும் போச்சு! முதல்வர் கனவு பொய்த்ததால் திருமாவளவன் அதிருப்தி!
Turkish Airlines plane tyres caught fire in Kathmandu, Nepal.
— Chay Bowes (@BowesChay) May 11, 2026
All passengers and crew were evacuated. pic.twitter.com/AVYJ5Oq41P
இந்த சம்பவத்தால் காத்மாண்டு விமான நிலையத்தில் சில நேரம் பரபரப்பு நிலவியது. பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையம் சுமார் ஒரு மணி நேரம் தற்காலிகமாக மூடப்பட்டது. இதனால் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் தாமதமானதாக கூறப்படுகிறது.
தீ விபத்து ஏற்பட்ட உடனேயே விமான நிலைய தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆரம்ப கட்ட விசாரணையில் தொழில்நுட்ப கோளாறு அல்லது பிரேக் வெப்பம் காரணமாக சக்கரத்தில் தீப்பற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் விபத்திற்கான உண்மையான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக உலகின் பல பகுதிகளில் விமான அவசர சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், காத்மாண்டுவில் நடந்த இந்த சம்பவம் சர்வதேச விமான பாதுகாப்பு குறித்து மீண்டும் கவலை எழுப்பியுள்ளது. அதே நேரத்தில், விமான ஊழியர்களின் துரித நடவடிக்கையால் 288 பேரும் உயிர் தப்பியது பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தவெக தரும் அமைச்சர் பதவி யாருக்கு? தமிழக காங்., எம்.எல்.ஏ-க்கள் குஸ்தி சண்டை!!