மோடி–டிரம்ப் சந்திப்பில் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க வேண்டாம்! சர்ச்சைக்கு மத்திய அரசு விளக்கம்!
ஊடகங்களை சந்திக்க அனுமதிக்கலாம் என்றாலும், முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்பதே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கை என்று டிரம்பிடம் தெரிவித்ததாக செர்ஜியோ கோர் கூறியுள்ளார்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திப்பின்போது, பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி வேண்டாம் என இந்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டதாக அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் செர்ஜியோ கோர் கூறியிருந்த நிலையில், இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இடையே ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில், டிரம்ப் பத்திரிகையாளர்களிடம் கேள்விகளை கேட்க அனுமதித்தார். இதனால் அந்த நிகழ்ச்சி திட்டமிட்டிருந்த நடைமுறையைவிட விரிவான கேள்வி–பதில் நிகழ்ச்சியாக மாறியதாக செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த செர்ஜியோ கோர் கூறியதாக வெளியாகியுள்ள தகவலின்படி, மோடியுடனான சந்திப்புக்கு முன்பு டிரம்புடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது இந்திய தரப்பில் எந்த விவகாரங்கள் எழுப்பப்படலாம், குறிப்பிட்ட கோரிக்கைகள் ஏதேனும் உள்ளதா என்று டிரம்ப் கேட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பிரிட்டனில் வரலாறு காணாத தண்ணீர் பஞ்சம்! அரசு விதித்த நிபந்தனைகளால் மக்கள் அதிருப்தி!
மேலும், ஊடகங்களை சந்திக்க அனுமதிக்கலாம் என்றாலும், முழுமையான பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த வேண்டாம் என்பதே இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் கோரிக்கை என்று டிரம்பிடம் தெரிவித்ததாக செர்ஜியோ கோர் கூறியுள்ளார். இதற்கு டிரம்ப் சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், நிகழ்ச்சியின்போது இரு தலைவர்களும் தொடக்க உரைகளை வழங்கிய பிறகு, டிரம்ப் பத்திரிகையாளர்களை நோக்கி கேள்விகள் உள்ளதா என கேட்டதாகவும், அதன் பின்னர் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், வெளிநாட்டு பயணங்களுக்கு முன்பு தலைவர்களின் பொது நிகழ்ச்சிகள் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது குறித்து இரு நாடுகளின் அதிகாரிகளும் ஆலோசிப்பது வழக்கமான நடைமுறை என்று தெரிவித்துள்ளன. அந்த அடிப்படையில்தான் இந்தியாவின் வழக்கமான நடைமுறை மற்றும் நிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்து அமெரிக்க தரப்பிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசு வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன.
இதனால், பத்திரிகையாளர்களின் கேள்விகளை முற்றிலும் தடுக்க இந்தியா முயன்றதாக பொருள் கொள்ளக்கூடாது என்றும், தலைவர்களின் பொது நிகழ்ச்சி தொடர்பான நடைமுறைகளை முன்கூட்டியே ஒருங்கிணைப்பது வழக்கமான நிர்வாக நடவடிக்கை என்றும் மத்திய அரசு தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இதையும் படிங்க: என் மகன்களில் ஒருவரை குறிவைத்தது ஈரான்! குடும்பத்துக்கே வந்த ஆபத்து? இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பரபரப்பு குற்றச்சாட்டு!