இந்தியாவுக்கு எதிராக பாக்., பின்னும் ரகசிய சதிவலை.. மீண்டும் கட்டப்படும் பயங்கரவாதிகள் முகாம்..!
ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் உருவாக்கும் பணிகளை பாகிஸ்தான் மீண்டும் துவங்கியுள்ளது
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக, சிந்தூர் ஆபரேஷன் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி இந்திய விமானப்படை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் பஹவல்பூர், முரிட்கே, சியால்கோட், கோட்லி, நரோவால், பிம்பர், முசாஃபராபாத் ஆகிய இடங்களில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. 150க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூரின் போது அழிக்கப்பட்ட பயங்கரவாத முகாம்களை மீண்டும் உருவாக்கும் பணிகளை பாகிஸ்தான் மீண்டும் துவங்கியுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் இதற்கான வேலைகள் முழு வீச்சில் துவங்கியிருக்கிறது.
பயங்கரவாத முகாம்களை மீண்டும் உருவாக்கி வருவது லஷ்கர்-இ-தொய்பாவோ, ஜெய்ஷ்-இ-முகமதுவோ, ஹிஸ்புல் முஜாஹிதீனோ, டிஆர்எஃப்போ இல்லை. பாக்., ராணுவம், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ISI தான்.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானுக்கு கொம்பு சீவிய சீனா..! உளறிக்கொட்டிய ராணுவ அமைச்சரால் உண்மை அம்பலம்..!
முகாம் இருப்பதை இந்திய ராணுவம் ரேடார் அல்லது சேட்டிலைட் தொழில்நுட்பங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் இந்த பயங்கரவாத முகாம்கள் உருவாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
கெல், சர்தி, துத்னியல், அத்முகம், ஜுரா, லிபா, பச்சிபன், கஹுடா, கோட்லி, குய்ரட்டா, மந்தர், நிகைல், சாமன்கோட், ஜான்கோட் ஆகிய இடங்களிலும் புதிய பயங்கரவாத முகாம்களை பாகிஸ்தான் கட்டமைத்து வருகிறது. இந்த இடங்கள் கடினமான நிலப்பரப்பு மற்றும் அடர்ந்த காடுகளை கொண்டதாகும்.
இந்தியாவின் ட்ரோன் மற்றும் சேட்டிலைட் தொழில்நுட்பங்களால் இந்த இடங்களை எளிதில் கண்டுபிடிக்க முடியாது எனவும், அதற்காகத்தான் இந்த இடங்களை பாகிஸ்தான் செலக்ட் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
ஒவ்வொரு முகாமிலும் 200க்கும் குறைவான பயங்கரவாதிகளை தங்க வைக்கும் திட்டத்தை ஐ.எஸ்.ஐ உருவாக்கியுள்ளதாகவும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருவேளை, இந்திய விமானப்படை வான்வழித் தாக்குதல் நடத்தும்பட்சத்தில் கொல்லப்படும் பயங்கரவாதிகள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் என ஐஎஸ்ஐ கணக்கு போடுகிறது. ஆனாலும் இந்த மினி பயங்கரவாத முகாம்களைச்சுற்றிலும் பிரத்யேக பாதுகாப்பு சாதனங்களை பொருத்த ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ வீரர்களை பாதுகாப்புக்கு நிறுத்தவும் திட்டமிட்டுள்ளனர். தெர்மல் சென்சார், ரேடார் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு உபகரணங்களும் இம்முகாம்களில் பொருத்தப்படவுள்ளதாக இந்திய உளவுத்துறைக்கு தகவல் தெரிய வந்திருக்கிறது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தி இன்னும் 2 மாதங்கள்கூட முடியாத நிலையில், இருநாடுகளின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீண்டும் பயங்கரவாத முகாம்களை உருவாக்க பாகிஸ்தான் ஜரூராக வேலை பார்த்து வருவது, ஜம்மு காஷ்மீரில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தும் பாகிஸ்தானின் சதிச்செயலாகவேபார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: பாக்., பெண்ணுக்கு ராணுவ ரகசியங்கள் கசிந்தது எப்படி? கடற்படை ஊழியரை ஆட்டிப்படைத்த ஆன்லைன் மோகம்..!