தாஷ்கண்ட் முழுவதும் மூவர்ணம்! பிரதமர் மோடிக்கு உஸ்பெகிஸ்தான் கொடுத்த சர்ப்ரைஸ்! பிரம்மாண்ட ஏற்பாடு!
தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில கிழக்கியல் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார்.
தாஷ்கண்ட்: பிரதமர் நரேந்திர மோடியின் உஸ்பெகிஸ்தான் வருகையை முன்னிட்டு, அந்நாட்டின் தலைநகர் தாஷ்கண்ட் இந்திய தேசியக் கொடியின் மூவர்ண விளக்குகளால் ஜொலித்தது. குறிப்பாக புகழ்பெற்ற ஹில்டன் ஹோட்டல் உள்ளிட்ட முக்கிய கட்டடங்கள் காவி, வெள்ளை, பச்சை நிற விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது இந்தியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் தாஷ்கண்டில் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இது உஸ்பெகிஸ்தானுக்கு அவர் மேற்கொள்ளும் நான்காவது பயணமாகும். தாஷ்கண்ட்-ஹுமோ சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமர் மோடியை அதிபர் மிர்சியோயேவ் நேரில் வரவேற்றார். இரு தலைவர்களும் பின்னர் யாங்கி உஸ்பெகிஸ்தான் பூங்காவுக்குச் சென்று சுதந்திர நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மோடியின் வருகையையொட்டி தாஷ்கண்ட் நகரம் முழுவதும் இந்தியக் கொடிகள் மற்றும் வரவேற்பு பதாகைகள் இடம்பெற்றிருந்தன. இந்திய வம்சாவளியினரும் பிரதமருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் கலாசார உறவை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. லால் பகதூர் சாஸ்திரி இந்திய கலாசார மைய மாணவர்களின் கதக் நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
இதையும் படிங்க: உஸ்பெகிஸ்தான் புறப்பட்டார் மோடி! அடுத்து கிர்கிஸ்தான்! 4 நாள் பயணத்தில் நடக்கப்போகும் முக்கிய சந்திப்புகள்!
தாஷ்கண்டில் நடைபெறும் முக்கிய பேச்சுவார்த்தைகளில் இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான வர்த்தகம் மற்றும் முதலீடு, பாதுகாப்பு, டிஜிட்டல் இணைப்பு, எரிசக்தி, கல்வி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. இரு நாடுகளின் எதிர்கால வளர்ச்சி இலக்குகளான ‘விக்சித் பாரத் 2047’ மற்றும் ‘உஸ்பெகிஸ்தான்-2030’ ஆகியவற்றை முன்னெடுப்பது குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளைப் பரிமாற உள்ளனர்.
மேலும், தாஷ்கண்டில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடம் மற்றும் தாஷ்கண்ட் மாநில கிழக்கியல் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி மையத்தையும் பிரதமர் மோடி பார்வையிட உள்ளார். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று மற்றும் மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்த இந்தியா முயற்சி மேற்கொள்கிறது.
உஸ்பெகிஸ்தான் பயணத்தைத் தொடர்ந்து பிரதமர் மோடி கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கிற்கு சென்று, ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 1 வரை நடைபெறும் 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்கிறார்.
இதையும் படிங்க: குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் கொண்டாடிய மோடி! பிரதமர் அலுவலகத்தில் குட்டீஸ் விசிட்! வைரலாகும் புகைப்படங்கள்!