ரூ.5 பிஸ்கட் ரூ.2400க்கு விற்பனை.. காசாவில் போரால் ருத்ர தாண்டவம் ஆடும் வறுமை..!
இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023ம் ஆண்டு அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து, துல்லிய தாக்குதல்கள் நடத்தி, இஸ்ரேல் படைகள் கொன்று வருகின்றன.
காசாவை கையில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக இஸ்ரேல் தீவிர போரில் ஈடுபட்டுள்ளது. 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் புகுந்து ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய கொடிய தாக்குதலில் அப்பாவி மக்கள் 1200 பேர் கொல்லப்பட்டனர்.
250 பேரை பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து சென்றனர். பதிலடி கொடுக்கவும், பிணைக்கைதிகளை மீட்கவும் தான் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல். டிரம்ப் அதிபரானதும் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஏராளமான பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: போர் நிறுத்த ஒப்பந்தத்தை உடைத்தெறிந்த அமெரிக்கா..! இஸ்ரேல் - ஹமாஸ் போரால் செத்து அழியும் காசா மக்கள்..!
ஆனால் எல்லா பயங்கரவாதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிக்க ஹமாஸ் மறுத்ததால் 60 நாட்களில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. இதனால் தான் 2 மாதம் முன்பு மீண்டும் காசாவில் போரை துவங்கியது இஸ்ரேல்.
முன் எப்போதும் இல்லாத அளவு காசாவில் தரை வழியாகவும், வான் வழியாகவும் தீவிர தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வருகிறது. ஒரே நாளில் மட்டும் இஸ்ரேல் குண்டு வீச்சில் காசாவில் 60 பேர் மரணம் அடைந்தனர். 20 மாதங்களாக நடக்கும் போரில் இதுவரை 54 ஆயிரம் பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
சர்வதேச நாடுகள் அனுப்பிய மனிதாபிமான உதவிகளை இஸ்ரேல் அனுமதிக்காததால், காசாவில், உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஐ.நா. தரவு அறிக்கையின்படி, காசாவில் இளம் குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு விகிதம் கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மே மாதத்தின் இரண்டாம் பாதியில் ஐ.நா தலைமையிலான ஊட்டச்சத்து குழு நடத்திய பகுப்பாய்வில், காசாவில் பரிசோதிக்கப்பட்ட கிட்டத்தட்ட 50,000 ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 5.8% பேர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளைக் கொண்டு இருந்தது கண்டறிந்துள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் மலிவு விலையில் 5 ரூபாய்க்கு கிடைக்கும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட், போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் அசல் விலையை விட 500 மடங்கு அதிகமாக விற்கப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காசாவைச் சேர்ந்த முகமது ஜாவத் தன் குழந்தைக்கு பிடித்தமான பார்லே -- ஜி பிஸ்கட்டை வாங்கி தந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதன் விலை தற்போது 2,342 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும், இருப்பினும் குழந்தையின் ஆசைக்காக வாங்கி தந்தாக அதில் கூறியுள்ளார்.
அந்தப் பதிவில், "நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்று ரவீஃப்புக்குப் பிடித்த பிஸ்கட் எனக்குக் கிடைத்தது. விலை 1.5 யூரோக்களிலிருந்து 24 யூரோக்களுக்கு மேல் உயர்ந்தாலும், ரவீஃப்புக்குப் பிடித்த விருந்தை என்னால் மறுக்க முடியவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மீண்டும் மீண்டும் அட்டூழியம் செய்யும் இஸ்ரேல்.. காசா மீது தாக்குதல்.. 27 பேர் பரிதாப பலி..!