நாசமா போச்சு... கோவில் நகரத்தை குப்பை மேடாக்கியதுதான் திமுக சாதனை..! சீமான் விமர்சனம்
கோவில் நகரத்தை குப்பை மேடாக்கியதுதான் திமுக அரசின் சாதனை என சீமான் விமர்சித்தார்.
5000 ஆண்டுகளுக்கும் மேலான பழம்பெருமை வாய்ந்த தொன்தமிழ் நகரமான மதுரை மாநகரம் இந்தியாவின் தூய்மையற்ற நகரங்களில் முதலிடம் பிடித்திருப்பது அதிர்ச்சி அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். சங்கம் வைத்து தமிழ் வளர்த்து, பாண்டிய மன்னர்கள் கட்டிக்காத்த கோயில் மாநகரம் மதுரை திராவிட மாடல் ஆட்சியில் குப்பை நகரமாக மாறி நிற்பதுதான் வரலாற்றுப் பெருங்கொடுமை என்று வேதனை தெரிவித்தார்.
மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் வெளியிட்ட தூய்மை ஆய்வு 2025 அறிக்கையின்படி, அசுத்தமான நகரங்களில் மதுரை முதலிடத்தையும், தலைநகர் சென்னை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது என்று கூறினார். சிங்கார சென்னை என்று சொல்லிச் சொல்லி 60 ஆண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நீர்நிலைகளை அழித்து, சுற்றுச்சூழலை சீர்கெடுத்து வாழத்தகுதியற்ற நகரமாகச் சென்னையை மாற்றியுள்ளது திராவிட மாடல் அரசு என்றும் வளர்ச்சி என்ற பெயரில் வடசென்னை முழுவதும் கொடுநோய்களை உண்டாக்கும் மோசமான தொழிற்கழிவுகளால் நிரம்பி வழிவது பேரவலத்தின் உச்சம் எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
சென்னை மட்டுமின்றி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருப்பூர், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களும் கழிவுநீராலும், குப்பைகளாலும் நிரம்பி தமிழ்நாடே குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது என்றும் திராவிடக் கட்சிகள் 60 ஆண்டுகள் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை ஆண்ட பிறகும் கழிவுநீரை அகற்ற முறையான திட்டங்கள் ஏற்படுத்தப்படவில்லை எனவும் மக்கள் பயன்படுத்தும் குப்பைகளை முறையாக அப்புறப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டம் எதுவும் தீட்டப்படவில்லை என்றும் கூறினார். நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலை கழிவுநீரை திராவிட அரசுகளால் தடுக்க முடியவில்லை., விளைவாக தமிழ்நாட்டிலுள்ள நகரங்கள் அனைத்தும் சுகாதாரம் சீர்கெட்டு மக்களுக்குக் கொடுநோய்களை ஏற்படுத்தும் நரகங்களாக மாறி நிற்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: பெருங் கலைஞன்... பேராளுமை..! கமல்ஹாசனுக்கு புகழ் மகுடம் சூட்டிய சீமான்...!
குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகள் கடந்த 15 ஆண்டுகளாக பாறைக்குழிகளிலேயே கொட்டப்படுவதாகவும், திருப்பூர் எல்லையைக் கடந்து, ஊத்துக்குளி, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் கொட்ட முயற்சித்து, அதற்கும் மக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால், தற்போது வேறு வழியின்றி மீண்டும் பாறைக் குழிகளிலேயே கொட்டப்படுவதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர் என்றும் கூறினார். திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் ஒவ்வொரு நாளும் சேகரிக்கப்படும் 700 டன் குப்பைகளை மக்களுக்கு இடையூறு இல்லாது பாதுகாப்பாக அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகள் பாதுகாப்பு முக்கியமா தெரியலையா? சிதைந்து பள்ளிகளை சீரமைக்க சீமான் வலியுறுத்தல்...!