×
 

இலங்கை தமிழ் வம்சாவளி பெண்ணுக்கு பிரிட்டனில் அமைச்சர் பதவி!! அகதிகளின் மகளாக இருந்து அமைச்சரவை நோக்கி பயணம்!

பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சராக இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன், பிரிட்டன் வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் (Foreign, Commonwealth and Development Office) இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இந்த முக்கிய அமைச்சகத்தில் அமைச்சராக பொறுப்பேற்பது வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகக் கருதப்படுகிறது.

பிரிட்டனில் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கு புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக உமா குமரனுக்கு இந்த முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கை, சர்வதேச உறவுகள் மற்றும் காமன்வெல்த் நாடுகளுடனான ஒத்துழைப்பு போன்ற முக்கிய அம்சங்களில் இந்த அமைச்சகத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. இதனுடன், அரசின் துணை கொறடாவாகவும் அவர் செயல்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து உமா குமரன் வெளியிட்ட அறிக்கையில், இந்த பொறுப்பு தனக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக தெரிவித்துள்ளார். உலகம் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், பிரிட்டனின் குரலும் சர்வதேச தலைமைத்துவமும் மிகவும் முக்கியமானதாக இருப்பதாகவும், அந்தப் பொறுப்பை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி செல்பி வீடியோ... ஒரே நாளில் 10 லட்சம் புதிய Followers, 30.5 கோடி Views! இன்ஸ்டாகிராமில் வெடித்த வைரல்!

உமா குமரனின் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள். 1980-களில் இலங்கை உள்நாட்டுப் போரின் போது அங்கிருந்து வெளியேறி பிரிட்டனில் அகதிகளாக குடியேறினர். லண்டனில் பிறந்து வளர்ந்த உமா, குயின் மேரி பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொதுக் கொள்கை தொடர்பான கல்வியை முடித்தார். பின்னர் தேசிய சுகாதார சேவை (NHS), நாடாளுமன்ற ஆய்வாளர், லண்டன் மேயர் அலுவலகம் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றார். மேலும் முன்னாள் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் குழுவில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான துணை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற பிரிட்டன் பொதுத்தேர்தலில் ஸ்ட்ராட்ஃபோர்ட் அண்ட் போ (Stratford and Bow) தொகுதியில் 11,634 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். இதன் மூலம் பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு தேர்வான முதல் இலங்கை தமிழ் வம்சாவளி நபராக அவர் வரலாறு படைத்தார். தற்போது வெளியுறவு அமைச்சகத்தில் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளதால், உலக அரங்கில் தமிழர் சமூகத்திற்கு மேலும் ஒரு முக்கிய அங்கீகாரம் கிடைத்துள்ளதாக பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிங்க: ருமேனியாவில் ஒலித்த இந்தியாவின் பெருமை! ஜனாதிபதி முர்முவுக்கு உயரிய கவுரவம்! சிறப்புகள் என்ன?!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share