திருவண்ணாமலைக்கு நெய் காணிக்கை செலுத்தப் போறீங்களா?... இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...!
தீபத் திருவிழாவிற்காக பக்தர்கள் நெய் காணிக்கை செலுத்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மகாதீபம் ஏற்ற ஆவின் நிறுவனத்திடம் இருந்து 35 லட்சம் மதிப்பில் 4500 கிலோ ஆவின் நெய்யை கொள்முதல் செய்த கோவில் நிர்வாகம், சிறப்பு பூஜைகளுடன் நெய் காணிக்கை விற்பனையை தொடங்கியுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றாக கருதக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை 63 அடி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில்,வருகின்ற டிசம்பர் டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையார் கருவறை முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனை தொடர்ந்து அன்று மாலை 2,668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
இதையும் படிங்க: "90% பாமாயில் கலப்படம்"... திருப்பதி நெய் சர்ச்சையில் உ.பி. நிறுவனத்தின் சதி அம்பலம்...!
3 ஆம் தேதி ஏற்றப்படும் மகா தீபமானது தொடர்ந்து 11 நாட்களுக்கு அண்ணாமலையார் ஜோதிப் பிழம்பாய் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதற்காக மகாதீப கொப்பரையில் 4500 கிலோ நெய் மற்றும் 1500 மீட்டர் காடா துணி திரியாக பயன்படுத்தப்பட உள்ளது.
மகா தீபத்திற்கு நெய் காணிக்கையை பக்தர்கள் செலுத்த ஏதுவாக அண்ணாமலையார் திருக்கோவில் ராஜகோபுரம் அடுத்துள்ள திட்டி வாசற்படி அருகே நெய் காணிக்கை கவுண்டரை இன்று கோவில் நிர்வாகம் சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியுள்ளது.
நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் நெய் குடத்தை காணிக்கையாக அளித்து வருகின்றனர். மேலும் நெய் காணிக்கைப் பணமாக செலுத்த பக்தர்களின் வசதிக்காக ஒரு கிலோ நெய் ரூபாய் 250, அரை கிலோ நெய் ரூபாய் 150, கால் கிலோ நெய் ரூபாய் 80 என ரொக்கமாகவும் காணிக்கை பெறப்படுகிறது.
திருவண்ணாமலை மாவட்ட ஆவின் நிறுவனத்திடம் இருந்து அக்மார்க் ஆவின் நெய்யை கோவில் நிர்வாகம் ரூபாய் 35 லட்சம் மதிப்பிலான 4500 கிலோ கொள்முதல் செய்து திருக்கோவிலில் வைத்துள்ளது.
நெய் காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்திற்கு பிறகு பிரசாதமாக வழங்கப்படும் என கோவில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று நெய் காணிக்கை கவுண்டர் திறக்கப்பட்ட நிலையில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து நெய் காணிக்கை செலுத்தி வருகின்றனர். நேரில் காணிக்கை செலுத்த முடியாதவர்கள் ஆன்லைன் மூலமாக காணிக்கை செலுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம்!! இந்து முன்னணி கையில் எடுக்கும் அஸ்திரம்! முருக பக்தர்களுக்கு அழைப்பு!