×
 

ஈரான் எண்ணெய்யை விற்க 30 நாட்களுக்கு அனுமதி!! விலையேற்றத்தை கட்டுப்பட்டுத்த இறங்கி வந்த அமெரிக்கா!

உலக சந்தையில் ஈரானின் கச்சா எண்ணெயை விற்பனை செய்ய 30 நாட்களுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், ஈரான் மீதான போர் காரணமாக உயர்ந்துள்ள உலக எண்ணெய் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. ஈரானின் கச்சா எண்ணெயை உலக சந்தையில் விற்பனை செய்வதற்கான தடைகளை 30 நாட்களுக்கு தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.

இந்த அனுமதியால், தற்போது கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈரானின் சுமார் 14 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விரைவில் உலக சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை எரிபொருள் விலை உயர்வால் அவதிப்படும் உலக நாடுகளுக்கு பெரும் நிம்மதியை அளிக்கும் என்று கருதப்படுகிறது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் பெசென்ட் இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “உலகளாவிய பயங்கரவாதத்தின் தலைமையிடமாக ஈரான் விளங்குகிறது. அதிபர் டிரம்ப் தொடங்கிய ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ நடவடிக்கை மூலம் நாம் எதிர்பார்த்ததை விட வேகமாக வெற்றி பெற்று வருகிறோம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: கவலையே படாதீங்க! கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடையும்! போர் விரைவில் முடியும் என்கிறார் அதிபர் ட்ரம்ப்!

மேலும், “ஈரானின் எரிசக்தி உள்கட்டமைப்புக்கு எதிரான தாக்குதல்களுக்கு பதிலடியாக, உலகுக்கு எரிசக்தி விநியோகத்தை அதிகரிக்கவும், சந்தை நிலைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இந்த தற்காலிக அனுமதியை வழங்கியுள்ளோம்.

இதன் மூலம் 14 கோடி பீப்பாய் எண்ணெய் உடனடியாக சந்தைக்கு வரும். இதுவரை டிரம்ப் நிர்வாகம் 440 மில்லியன் பீப்பாய்க்கும் அதிகமான எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வர உழைத்துள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

அமெரிக்கா தனது சொந்த எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளதாகவும், இந்த எரிசக்தி ஆதரவுத் திட்டம் அமெரிக்கர்களுக்கு நீண்ட காலப் பொருளாதார நன்மையைத் தரும் என்றும் பெசென்ட் வலியுறுத்தினார். தற்போதைய சிறிய இடையூறுகள் இறுதியில் பெரிய ஆதாயமாக மாறும் என்பது அவரது நம்பிக்கை.

ஈரான் மீதான போர் தொடங்கியதில் இருந்து உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை கூர்மையாக உயர்ந்தது. இந்தியா உள்ளிட்ட இறக்குமதி சார்ந்த நாடுகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டன. இந்த 30 நாட்கள் அனுமதி விலை உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இந்த அனுமதி 30 நாட்களுக்கு மட்டுமே என்றும், அதன் பிறகு நிலைமை மீண்டும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: ஈரான் போரை முடிச்சுக்கலாமானு பரிசீலிக்கிறேன்!! ராணுவ நடவடிக்கையும் குறைக்கலாம்! அதிபர் ட்ரம்ப் சூசகம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share