×
 

3வது உலகப்போர் துவங்கி இருக்கும்.! இந்தியா - பாக்., ஈரான் - இஸ்ரேல் போர் ரகசியங்களை உடைக்கும் ட்ரம்ப்..

இந்தியா - பாக். மட்டுமின்றி, ருவாண்டா, காங்கோ, செர்பியா, கொசோவோ, இஸ்ரேல், ஈரான், உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் தலைவர்களுடன் தான் நேரடியாக பேசி பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்‌ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. 

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் கடந்த 6-ந்தேதி நள்ளிரவில் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. ஜெய்ஷ் இ முகமது தலைவன் மசூத் அசார் குடும்பத்தினர் உட்பட 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 

இதனால் இரு நாடுகளிடையே தீவிர போர் மூளுமோ என்ற அச்சம் மக்களிடையே ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 10ம் தேதி மாலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதையும் படிங்க: வேற லெவல்.. இனி பாக்., சீனா வாலாட்ட முடியாது! சப்தமே இல்லாமல் சம்பவம் செய்த இந்தியா!

இந்தியாவும் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்த சம்மதம் தெரிவித்ததாக கூறினார். அவரது அறிவிப்பு வெளியான சிறிது நேரத்தில் இருதரப்பு சண்டை நிறுத்தத்தை இந்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரியும் உறுதி செய்தார். அன்று மாலை 5 மணியில் இருந்து தாக்குதல் நிறுத்தம் அமலானது. 

இந்த நிலையில், ட்ரம்ப் மத்தியஸ்சம் குறித்தும், போர் நிறுத்தம் குறித்து இந்தியா - பாக்., அறிவிக்கும் முன்னரே ட்ரம்ப் அறிவித்தது குறித்தும் சர்ச்சையானது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் சிறப்பு கூட்டம் கூட்டி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது. போரில் பாகிஸ்தான் கெஞ்சியதால் தான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது என மத்திய அரசு வாதிட்டு வருகிறது. சமீபத்தில் ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் மூன்றாம் நபர் தலையீடு இல்லை. அதை நாங்கள் அனுமதிக்கவும் மாட்டோம் என பகீரங்கமாகவே அறிவித்தார்.

இந்த நிலையில் நேட்டோ நாடுகள் பங்கேற்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து சென்ற அமெரிக்க அதிபர் டொலான்டு டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். உலகின் பல்வேறு பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட நான் மிகப் பெரிய முயற்சி எடுத்துள்ளேன்.

கடந்த காலங்களில் உக்ரைன், ரஷ்யா நாடுகளின் தலைவர்களுடன் பேச்சு நடத்தினேன்.  தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் முடிவுக்கு வந்ததில் அமெரிக்காவின் பங்களிப்பு மிக அதிகம். நான் தலையிடாமல் இருந்திருந்தால், போர் முடிவுக்கு வந்திருக்காது. அப்படி நடந்திருந்தால் அது மிகப் பெரிய போராக மாறியிருக்கும். மிகப் பெரிய விளைவுகளை சந்திக்க வேண்டிய சூழல் உருவாகியிருக்கும். 

அனைத்தையும் விட முக்கியமாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான சண்டையை நான் முடிவுக்கு கொண்டு வந்தேன். இரு நாடுகளும் அணு ஆயுதங்களை உடைய மிகப் பெரிய நாடுகள். அவர்கள் தங்களுக்குள் எப்படி சண்டையிட்டுக் கொண்டார்கள் என உலகம் அறியும். அப்படிப்பட்ட சூழலில் நான் இரு நாடுளையும் தொடர்பு கொண்டு பேசினேன். நீங்கள் சண்டையை நிறுத்தாவிட்டால், உங்களுடன் அமெரிக்கா வர்த்தகம் செய்யாது எனக் கூறினேன். 

உடனே இரு நாடுகளும் சண்டையை கைவிடுவதாக அறிவித்தன. கடந்த வாரம் கூட பாகிஸ்தானின் ராணுவ ஜெனரல் என்னை அமெரிக்காவில் சந்தித்தார். அந்நாட்டின் தலைவர்கள் விரைவில் அமெரிக்காவுக்கு வருவதாக உறுதி அளித்துள்ளனர். இந்திய பிரதமர் மோடி எனக்கு நல்ல நண்பர். அவர் மிகப் பெரிய மனிதர். அது மட்டுமின்றி, கொசோவோ, செர்பியா, காங்கோ, ருவாண்டாவின் பிரச்னைகளுக்கும் நான் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்தேன். காங்கோ, ருவாண்டாவின் தலைவர்கள் அடுத்த வாரம் என்னை சந்திப்பதாக கூறியுள்ளனர். இவ்வளவு அதிகமான பெரிய விஷயங்களை வேறு யாரும் செய்ததில்லை. 

நான் தலையிடாமல் இருந்திருந்தால் பல போர்கள் பெரிதாகியிருக்கும். இரண்டாம் உலகப் போரின் பாதிப்பை நாம் அறிந்திருக்கிறோம். அப்படி ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதில் நான் தெளிவாக செயல்பட்டேன். எனது முயற்சிகளுக்கு வெற்றியும் கிடைத்துள்ளது என டிரம்ப் பேசினார். இந்தியா - பாகிஸ்தான் சண்டை முடிவுக்கு வர வெளிநபர்கள் காரணம் இல்லை. பாகிஸ்தான் நேரடியாக கேட்டுக்கொண்டதால் தான் அது நடந்தது என மத்திய அரசு பல முறை விளக்கி விட்டது. 

இந்தியாவிடம் சண்டை நிறுத்தத்திற்காக நாங்கள் நேரடியாக பேச்சு நடத்தினோம் என பாக்., துணை பிரதமரும் கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், இந்தியா - பாக். மட்டுமின்றி, ருவாண்டா, காங்கோ, செர்பியா, கொசோவோ, இஸ்ரேல், ஈரான், உக்ரைன், ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளின் தலைவர்களுடன் தான் நேரடியாக பேசி பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்ததாக டிரம்ப் கூறியுள்ளார். 

தவிர இதில் பெரும்பாலான நாடுகளின் பிரச்னைக்கு தன்னால் தான் தீர்வு ஏற்பட்டதாகவும், இப்படிப்பட்ட செயலை யாரும் செய்ததில்லை என்றும் கூறியுள்ளார். இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசை மனதில் வைத்தே டிரம்ப் இப்படி பேசி வருவதாக, உலக அரசியல் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது. 

இதையும் படிங்க: உயிர் தப்பி இஸ்ரேலில் இருந்து டெல்லி வந்த 160 இந்தியர்கள்..! உற்சாகமாக வரவேற்ற உறவினர்கள்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share