1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றம் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள கடும் எச்சரிக்கை சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்னை படுகொலை செய்ய ஈரான் முயற்சித்தால், அந்த நாட்டை குறிவைத்து 1,000 ஏவுகணைகள் ஏற்கனவே தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருப்பது உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பதிவில் டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரான் அரசு உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக அச்சுறுத்தல்களை தொடர்ந்து விடுத்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். அந்த அச்சுறுத்தல்கள் செயலில் மாறி, தற்போதைய அமெரிக்க அதிபரான தன்னை படுகொலை செய்யவோ அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபடவோ செய்தால், அமெரிக்காவின் பதில் நடவடிக்கை மிகக் கடுமையாக இருக்கும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
டிரம்ப் கூறியதன்படி, ஈரானை குறிவைத்து 1,000 ஏவுகணைகள் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளதாகவும், அவற்றை ஏவுவதற்கான உத்தரவுகளும் முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி, முதல் தாக்குதலுக்குப் பிறகு ஆயிரக்கணக்கான கூடுதல் ஏவுகணைகள் உடனடியாக பயன்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இத்தாலி பிரதமர் மெலோனியை மீண்டும் சீண்டிய ட்ரம்ப்! போட்டோ போட்டு கிண்டல் கமெண்ட்!
மேலும், அமெரிக்க ராணுவம் ஈரானின் எந்தப் பகுதியையும் தாக்கும் திறனும், அதற்கான முழுமையான தயார்நிலையும் கொண்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், எந்தவித தயக்கமும் இன்றி பதிலடி கொடுக்கப்படும் என்ற கடுமையான எச்சரிக்கையையும் அவர் பதிவு செய்துள்ளார்.
டிரம்பின் இந்த கருத்துகள், ஏற்கனவே பதற்றமான அமெரிக்கா - ஈரான் உறவை மேலும் தீவிரப்படுத்தும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல், அணு விவகாரம் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மோதல் காரணமாக, இந்த எச்சரிக்கை உலகளவில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில், டிரம்பின் கருத்துக்கு ஈரான் அரசு இதுவரை அதிகாரப்பூர்வ பதில் அளிக்கவில்லை. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகள் உன்னிப்பாக கவனம் செலுத்தி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்குமா அல்லது பேச்சுவார்த்தை மூலம் நிலைமை சீரடையுமா என்பது சர்வதேச அளவில் முக்கிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது.
இதையும் படிங்க: இந்தியா- அமெரிக்கா இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம்!! நிறைவடையும் தருவாயில் உள்ளதாக தகவல்! வெளியானது குட்நியூஸ்!