×
 

அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி என்றால்... ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை தான்..!! டிரம்ப் வார்னிங்..!!

அமைதி பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டால், ஈரானுக்கு எதிராக தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது.

ஈரான் அணு சக்தி தொடர்பான பிரச்சினையில் அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதல்கள் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த ஏப்ரல் 8-ம் தேதி இரு வார காலப்போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் தலைமையில் மத்தியஸ்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தத்தை ஈரான் மற்றும் அமெரிக்கா இரு தரப்பும் ஏற்றுக்கொண்டன.

இதன் விளைவாக, உலக பொருளாதாரத்தை பாதித்த ஹார்முஸ் ஜலசந்தி மூடல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் பேச்சுவார்த்தைக்கு வழி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) தலைமையிலான உயர்மட்டக் குழு தனி விமானத்தில் இஸ்லாமாபாத் வந்தடைந்துள்ளது.

இக்குழுவில் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி (Abbas Araghchi), பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி உள்ளிட்டோர் அடங்கியுள்ளனர். பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம், அரசியல் மற்றும் சட்டம் தொடர்பான துறை வல்லுநர்களும் இணைந்துள்ள இந்தக் குழு, அமெரிக்காவுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது.

இதையும் படிங்க: மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம்: ஈரான், லெபனான் மீது போர்..!! இத்தனை லட்சம் கோடி செலவு செய்ததா இஸ்ரேல்..!!

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையில் பிரதிநிதிகள் குழு பாகிஸ்தானுக்கு புறப்பட்டுள்ளது. டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோரும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்கவுள்ளனர். பாகிஸ்தான் அரசு இந்தப் பேச்சுவார்த்தையை “மேக் அல்லது பிரேக்” தருணம் என வர்ணித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவுக்கு தீவிர ராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது. சிறந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கப்பல்களில் ஏற்றப்பட்டு காத்திருக்கின்றன. முந்தைய தாக்குதலை விட இது மிகவும் தீவிரமாக இருக்கும்” என்று எச்சரித்தார்.

இருப்பினும், ஈரான் நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால், அமெரிக்கா உதவி கரம் நீட்டத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார். துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், பாகிஸ்தானுக்கு புறப்படும் முன் நிருபர்களிடம், “பேச்சுவார்த்தை நேர்மறையான முடிவில் முடியும் என எதிர்பார்க்கிறேன். ஈரானியர்கள் நல்ல நம்பிக்கையுடன் பங்கேற்றால், நாங்கள் உதவிக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களுடன் விளையாட முயன்றால், உரிய பதிலடி கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

டிரம்ப் தனக்கு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளதாகவும் வான்ஸ் கூறினார்.இந்தப் பேச்சுவார்த்தையில் ஈரான் அணு சக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துதல், ஹார்முஸ் ஜலசந்தியைத் திறத்தல், பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு ஆதரவை நிறுத்துதல், பொருளாதாரத் தடைகளை நீக்குதல் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. லெபனான்-இஸ்ரேல் இடையிலான மோதலும் இதில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகள் இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவை ஆவலுடன் எதிர்பார்த்துள்ள நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தப் பங்கு சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது. இரு வார காலப்போர் நிறுத்தம் ஏப்ரல் 22 வரை நீடிக்கும் என்பதால், இந்தக் காலக்கெடுவுக்குள் நிரந்தர அமைதி ஒப்பந்தம் எட்டப்படுமா என்பது இப்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 

இதையும் படிங்க: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் மூடல்..!! அதிரடி காட்டும் ஈரான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share