×
 

டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்! அமெரிக்க தூதர் சொன்ன பரபரப்பு தகவல்!

இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தனது அரசு முறைப் பயணத்தையும், பிரதமர் மோடியுடனான சந்திப்புகளையும் டிரம்ப் அடிக்கடி நினைவுகூர்வதாகவும் தூதர் கூறியுள்ளார்.

புதுடெல்லி: அமெரிக்காவில் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டில், அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் உலகத் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலிடம் இருக்கும் என அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார். அவரது இந்தக் கருத்து இந்தியா-அமெரிக்கா உறவு தொடர்பாக கவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டிசம்பர் 14 மற்றும் 15ம் தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 35 தலைவர்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில், டிரம்ப் யாரை முதலில் சந்திக்க விரும்புவார் என்ற கேள்விக்கு பதிலளித்த செர்ஜியோ கோர், அந்தப் பட்டியலில் மோடிக்கு முதலிடம் இருக்கும் என கூறியுள்ளார்.

பிரதமர் மோடியை டிரம்ப் நண்பராக கருதுவதாகவும், எனவே இரு தலைவர்களின் சந்திப்பு ஜி20 மாநாட்டின் வழக்கமான கூட்டங்களைத் தாண்டி முக்கியமான பல்வேறு விவகாரங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற தனது அரசு முறைப் பயணத்தையும், பிரதமர் மோடியுடனான சந்திப்புகளையும் டிரம்ப் அடிக்கடி நினைவுகூர்வதாகவும் தூதர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: மோடிக்காக பெல்ஜியத்தில் தயாரான கிப்ட்! இந்தியா வருவதற்குள் நடந்த விபரீதம்! பெல்ஜியம் பிரதமருக்கு சிக்கல்!

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் பொருளாதார ரீதியாக பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இந்தியா-அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் சுமார் ரூ.23 லட்சம் கோடியாக இருப்பதாகவும், வரும் ஆண்டுகளில் இதை ரூ.47 லட்சம் கோடியாக உயர்த்த இரு நாடுகளும் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தியா-அமெரிக்கா இடையிலான ராணுவ ஒத்துழைப்பு ஆயுத விற்பனைக்கு மட்டும் வரையறுக்கப்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்தியாவுடன் நெருக்கமான உறவை மேலும் வலுப்படுத்த அமெரிக்கா விரும்புவதாகவும் தெரிவித்தார்.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வரும் அக்டோபரில் மீண்டும் இந்தியா வர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறுகிய கால இடைவெளியில் அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் இருமுறை இந்தியா வருவது இருதரப்பு உறவின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாகவும் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மாணவர்களின் திறமையை கண்டுபிடியுங்கள்! ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி முக்கிய அறிவுரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share