அமெரிக்காவில் படித்த பிறகு வேலை வேண்டுமா? ரூ.96 லட்சம் கட்டணம் விதிக்க டிரம்ப் திட்டம்... இந்திய மாணவர்களுக்கு அதிர்ச்சி!
அமெரிக்காவில் படிப்பை முடித்தவர்கள், தொடர்ந்து அங்கேயே பணியாற்றுவதற்கு ரூ.96 லட்சம் கட்டணமாக விதிக்க அதிபர் டிரம்ப் முடிவெடுத்துள்ளார். இது இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் உயர் கல்வி முடித்த சர்வதேச மாணவர்கள் அந்நாட்டிலேயே வேலை செய்து அனுபவம் பெறுவதற்கான வாய்ப்புக்கு புதிய கட்டணம் விதிக்கப்படலாம் என்ற தகவல் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்திய மாணவர்களை அதிகம் பாதிக்கக்கூடிய இந்த முன்மொழிவின் கீழ், சுமார் ரூ.96 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படலாம் என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி வசதிகள் மற்றும் வேலைவாய்ப்பு வாய்ப்புகள் காரணமாக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் அங்கு சென்று கல்வி கற்கின்றனர். இவர்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. தற்போது 3.3 லட்சத்திற்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி பயின்று வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
எப்-1 (F-1) மாணவர் விசா மூலம் அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு Optional Practical Training (OPT) திட்டத்தின் கீழ் ஒரு ஆண்டு வரை தங்கள் படிப்புடன் தொடர்புடைய துறையில் பணியாற்ற அனுமதிக்கப்படுகின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு இந்த காலம் அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹார்முஸ் ஜலசந்தி மூடப்படுமா? அதிரடி காட்டும் அதிபர் டிரம்ப் ... மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சம்!
இந்த OPT திட்டத்திற்கே புதிய கட்டணம் விதிப்பது குறித்து டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கட்டணம் சுமார் ரூ.96 லட்சம் வரை இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தத் தொகையை மாணவர்கள் செலுத்த வேண்டுமா அல்லது அவர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்கள் செலுத்த வேண்டுமா என்பது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.
மேலும், இந்த முன்மொழிவு தற்போது அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறையின் பரிசீலனையில் இருப்பதாகவும், இதுவரை எந்த இறுதி அறிவிப்பும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், அமெரிக்காவில் படித்த பிறகு அங்கேயே வேலை செய்ய விரும்பும் சர்வதேச மாணவர்களுக்கு இது மிகப்பெரிய பொருளாதார சவாலாக மாறும் என கல்வி வட்டாரங்கள் கருதுகின்றன. குறிப்பாக, இந்திய மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களில் இது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கவலையும் எழுந்துள்ளது.
இதையும் படிங்க: இரண்டு நாட்டு ராணுவத்தை மொத்தமா அழிச்சிட்டோம்! ஒரே ஒரு தாக்குதல் போதும்!! ட்ரம்ப் சுயதம்பட்டம்!