×
 

“குண்டு மழை பொழியும்... சின்னாபின்னமாகிடுவீங்க...” - ஓமானுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த டிரம்ப்...!

ஓமான் மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது வளைகுடா பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் விவகாரத்தில் தற்போது முக்கிய மத்தியஸ்த நாடாக செயல்பட்டு வரும் ஓமான் நாட்டுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளுக்கு ஓமான் இடையூறு ஏற்படுத்தினால், அந்நாட்டின் மீது கடுமையான வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்திருப்பது வளைகுடா பிராந்தியத்தில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான்–அமெரிக்கா இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 60 நாள் காலக்கெடு இன்றுடன் நிறைவடையும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்படுமா என்ற அச்சம் எழுந்துள்ளது. இதற்கிடையே டிரம்பின் புதிய கருத்து சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

ஈரான்–அமெரிக்கா பேச்சுவார்த்தைகளில் இதுவரை பாகிஸ்தான், கத்தார் உள்ளிட்ட நாடுகள் மத்தியஸ்தப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில், தற்போது ஓமான் முக்கிய பங்காற்றி வருகிறது. அமெரிக்காவுடன் நீண்டகால நட்புறவை கொண்டிருந்தாலும், ஈரான்–அமெரிக்கா மோதலில் ஓமான் தொடர்ந்து நடுநிலை வகித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த மூன்று வாரங்களாக ஈரான், ஓமான் வாயிலாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஈரான் அச்சுறுத்தலுக்கு மத்தியில் டிரம்பின் ரகசிய பயணம்.. ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ பின்னணி என்ன?

ஃபாக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பேசிய டிரம்ப், ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து அதன் மூலம் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக தெரிவித்தார். அதே நேரத்தில், ஹோர்முஸ் பகுதியில் அமெரிக்க கடற்படையின் நடவடிக்கைகளில் ஓமான் தலையிட்டால், அந்நாட்டுக்கு எதிராக கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

மேலும், ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதில் அமெரிக்காவுக்கு எந்த அவசரமும் இல்லை என்றும் டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார். அமெரிக்கா–ஈரான் மோதல் பல மாதங்களாக நீடித்து வரும் நிலையில், இதுவரை நிரந்தர தீர்வு எதுவும் எட்டப்படவில்லை.

டிரம்ப் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை வெளியிட்டு வருவதால், அவருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைக்கு முக்கிய வழியாக இருக்கும் ஓமான் நாட்டையே டிரம்ப் பகிரங்கமாக எச்சரித்திருப்பது வளைகுடா பகுதியில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

60 நாள் காலக்கெடு நிறைவடையும் நிலையில், ஈரான் வெள்ளைக் கொடி காட்டி சரணடைய வேண்டும் என்றும் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் மிட்-டெர்ம் தேர்தலில் ஈரான் தொடர்பான போர் முக்கிய பிரச்சினையாக இருக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் எந்த சூழ்நிலையிலும் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதிலும் அமெரிக்கா உறுதியாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் கூறுகையில், அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் அதற்கு எதிராக பதிலடி கொடுக்க ஈரான் முழுமையாக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனால், ஓமான் வழியாக நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகள் எந்த திசையில் செல்லும், அமெரிக்கா–ஈரான் இடையிலான போர் நிறுத்தம் தொடருமா அல்லது மீண்டும் மோதல் வெடிக்குமா என்ற எதிர்பார்ப்பு சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: டிரம்பின் 15 அம்சத் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு! காஸாவில் போர் நிறுத்தம் எப்போது?

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share