நிதி நெருக்கடியில் உக்ரைன்.. ஆபாசத்தை அங்கீகரிக்க ஜெலன்ஸ்கி முடிவு? பரபரக்கும் பின்னணி!
போர்க்களத்தில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவுடனான நீண்ட போர் உக்ரைனின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. பாதுகாப்புச் செலவு ஆண்டுக்கு சுமார் 120 பில்லியன் டாலர் தேவைப்படுகிறது. இந்நிலையில், கூடுதல் உள்நாட்டு வருவாய் திரட்டும் வழியாக ஆபாசத் தொழிலை சட்டப்பூர்வமாக்கி வரி விதிக்கும் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படுகிறது.
தற்போது உக்ரைனில் ஆபாசப் படங்களைத் தயாரிப்பது, விநியோகிப்பது அல்லது வைத்திருப்பது சட்டவிரோதமானது. இதற்கு அதிகபட்சம் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இருப்பினும், ஆன்லைன் தளங்கள் வழியாகவும் வெளிநாடுகளிலிருந்தும் இந்தத் தொழில் பெரிய அளவில் இயங்கி வருகிறது. குறிப்பாக OnlyFans போன்ற தளங்களில் 2023ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 7,900 உக்ரைனியர்கள் 131 மில்லியன் டாலருக்கும் அதிகமாக வருமானம் ஈட்டியுள்ளனர்.
ஆனால் சட்டப்பூர்வமாக அறிவித்தால் தண்டனை அபாயம் இருப்பதால் பலர் வருமானத்தை மறைக்கின்றனர். இதனால் அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவதுடன், ஊழலுக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது என விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவரும் எதிர்க்கட்சி உறுப்பினருமான யாரோஸ்லாவ் ஜெலெஸ்னியாக் இந்த மசோதாவை முன்னெடுத்துள்ளார்.
இதையும் படிங்க: வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல்: இந்திய மாலுமிகள் பலியானதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் கடும் கண்டனம்!
ஜூலை மாதம் முதல் வாசிப்பில் நிறைவேறிய இந்த மசோதா, தற்போது இரண்டாவது வாசிப்புக்காகக் காத்திருக்கிறது. சட்ட அங்கீகாரம் அளித்து வரி விதித்தால் ஆண்டுக்கு சுமார் 25 மில்லியன் டாலர் வருவாய் கிடைக்கலாம் என அவர் மதிப்பிட்டுள்ளார். இது பாதுகாப்புச் செலவுடன் ஒப்பிடும்போது சிறிய தொகையே என்றாலும், சுமார் 30,000 ட்ரோன்களை வாங்கப் போதுமானது என அவர் தெரிவித்துள்ளார்.
போர்க்களத்தில் ட்ரோன்கள் முக்கியப் பங்கு வகிப்பதால் இந்த நிதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் சட்டவிரோத நெட்வொர்க்கைக் கட்டுப்படுத்தி, ஊழலைக் குறைத்து, அரசுக்கு உரிய வரி கிடைக்கச் செய்யலாம் என ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர்.
போர் நீடிப்பதால் வெளிநாட்டு உதவியை மட்டும் நம்பியிருக்க முடியாத நிலையில், உள்நாட்டு வளங்களை முறையாகப் பயன்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம். மசோதா இறுதியாக நிறைவேறினால், ஆபாசத் தொழில் முறையான வரி அமைப்புக்குள் கொண்டுவரப்பட்டு, போர் முயற்சிக்கு சிறிய அளவிலேனும் உதவும் வாய்ப்பு உள்ளது.
இதையும் படிங்க: பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தையே கிடையாது! உக்ரைன் போரில் புடினின் அதிரடி எச்சரிக்கை!