Reckless attack! பொறுப்பற்ற தாக்குதல் ஏன்? ஈரானை கண்டிக்கும் மேற்காசிய நாடுகள்!
பொறுப்பற்ற தாக்குதல் என்று ஈரானை கண்டித்து அமெரிக்கா மற்றும் மேற்காசியாவில் உள்ள ஆறு நாடுகள் இணைந்து கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன.
மத்திய கிழக்கில் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரானின் பதிலடி தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது பெரும் வான்வழித் தாக்குதல் நடத்தின.
இதில் ஈரான் உச்ச தலைவர் அலி கமேனி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஈரான், அமெரிக்காவின் பிராந்திய ராணுவ தளங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இத்தாக்குதல்கள் ஈரானின் அண்டை நாடுகளான பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE) உள்ளிட்ட நாடுகளையும் பாதித்துள்ளன. வான்வெளி மூடல், விமான சேவைகள் ரத்து, சிவில் உள்கட்டமைப்புகளுக்கு சேதம், பொதுமக்கள் பாதிப்பு ஆகியவை ஏற்பட்டுள்ளன. பல நாடுகளில் ஏவுகணைகள் இடைமறிக்கப்பட்டாலும், சில இடங்களில் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிங்க: UAE-ல் தாண்டவமாடும் ஈரான்!! அமீரகத்தில் விழுந்த 708 குண்டுகள்!! இரக்கம் காட்டாமல் ஈரான் தாக்குவதால் அதிர்ச்சி!
இந்நிலையில், அமெரிக்காவுடன் இணைந்து பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஆறு நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கையில் ஈரானின் தாக்குதல்களை "பொறுப்பற்றது" (irresponsible), "அபாயகரமான விரிவாக்கம்" (dangerous escalation), "இறையாண்மைக்கு எதிரானது" என்று கடுமையாக கண்டித்துள்ளனர்.
"ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பல நாடுகளின் இறையாண்மைக்கு எதிரானவை. போரில் ஈடுபடாத நாடுகளை குறிவைத்தது, சிவில் மக்களை ஆபத்தில் ஆழ்த்தியது, உள்கட்டமைப்புக்கு சேதம் விளைவித்தது. இது நம்பிக்கையை சீர்குலைக்கும் செயல்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், "எங்கள் குடிமக்கள், இறையாண்மை, நாட்டை பாதுகாக்க ஒன்றிணைந்து நிற்கிறோம். இத்தாக்குதல்களுக்கு எதிராக சுயபாதுகாப்பு உரிமையை உறுதிப்படுத்துவோம்" என்று வலியுறுத்தியுள்ளனர்.
இந்த கூட்டறிக்கை ஈரானுக்கு எதிரான பிராந்திய ஒற்றுமையை வெளிப்படுத்துகிறது. பல நாடுகள் தங்கள் வான்பாதுகாப்பு அமைப்புகளை (Patriot, THAAD போன்றவை) பயன்படுத்தி தாக்குதல்களை தடுத்துள்ளன. ஆனால் போர் தொடர்ந்தால் மேலும் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எண்ணெய் விலை உயர்வு, பொருளாதார பாதிப்பு ஆகியவை உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை எச்சரித்து, மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. உலக நாடுகள் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து வரும் நிலையில், இந்த கூட்டறிக்கை போரை மேலும் சிக்கலாக்கும் என்று அஞ்சப்படுகிறது. மத்திய கிழக்கில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.
இதையும் படிங்க: தாக்குதலை தீவிரப்படுத்தும் ஈரான்! நிலைகுலைந்தது துபாய் ஏர்போர்ட்! நாளொன்றுக்கு ரூ.2,000 கோடி இழப்பு!!