லெபனானுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம்!! அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுக்கு தயார்!!
லெபனான் அரசுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதித்ததை அடுத்து, போர் நிறுத்த பேச்சுக்கு அமெரிக்காவும், ஈரானும் தயாராகி வருகின்றன.
மேற்காசியாவில் தொடர்ந்து பதற்றம் நிலவும் நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சு இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் தொடங்கியுள்ளது. லெபனான் அரசுடன் பேச்சு நடத்த இஸ்ரேல் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, போர் நிறுத்தம் தொடர்பான முயற்சிகளில் அமெரிக்காவும் ஈரானும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா - இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதால், உலக அளவில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டது. உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியதால், எண்ணெய் விலை உயர்ந்து, பல நாடுகளில் பற்றாக்குறை நிலவியது.
இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானை வலியுறுத்தி வந்தார். ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவும், போரை நிறுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டன. இந்தப் பேச்சுக்கு பாகிஸ்தான் மத்தியஸ்தம் வகித்தது. அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு இஸ்லாமாபாத் சென்றுள்ளது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! பெருமை பீத்தும் பாக்.,!! சப்தமே இல்லாமல் சாதித்த சீனா!
இதனிடையே, ஈரான் ஆதரவு ஹெஸ்பொல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. அமைதி பேச்சு முன்னேற்றத்திற்கு ஒரு முக்கிய நிபந்தனையாக, ஹெஸ்பொல்லா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது.
இஸ்ரேல் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், லெபனான் அரசுடன் பேச்சு நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தப் பேச்சு அடுத்த வாரம் அமெரிக்காவின் வாஷிங்டனில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் ஹெஸ்பொல்லாவுடன் அல்ல, லெபனான் அரசுடன் மட்டுமே பேச்சு நடத்தும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய சமீபத்திய தாக்குதல்கள் குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது. வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “லெபனானில் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்கள் உயிரிழப்பு கவலைக்குரியது. மக்கள் பாதுகாப்பே முதன்மை. சர்வதேச சட்டத்தை கடைப்பிடிப்பதும், நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதும் அவசியம். லெபனானில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்து வருகிறோம்” என்றார்.
மேலும், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முன்னாள் வெளியுறவு அமைச்சர் கமல் கராசி (81) உயிரிழந்தார். ஈரான் அரசு இதை உறுதிப்படுத்தியுள்ளது.
உலக நாடுகள் இப்போது அமைதி முயற்சிகளை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு மற்றும் லெபனான் பிரச்னை தீர்வு கண்டால், பிராந்திய அமைதி சாத்தியமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அமெரிக்கா - ஈரான் போர் நிறுத்தம்! இந்தியா வரவேற்பு!! நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும் என நம்பிக்கை!!