×
 

15 மணிநேரம்.. தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை..!! சமாதானம் ஆகுமா அமெரிக்கா-ஈரான்..??

இந்த பேச்சுவார்த்தையின்போது, இரு தரப்பு குழுவினரும் எழுத்து வடிவிலான ஆவணங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொண்டனர்.

மத்திய கிழக்கில் கடும் பதற்றத்தை ஏற்படுத்திய ஈரான் மீதான அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்த தாக்குதல், பிப்ரவரி 28 அன்று தொடங்கி சுமார் ஆறு வாரங்கள் நீடித்தது. இந்த போரில் இரு தரப்பிலும் பெரும் இழப்புகள் ஏற்பட்டன. ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி தொடர்பான வசதிகள் மற்றும் முக்கிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.

இறுதியில், ஏப்ரல் 7 அன்று இரு வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தால் இந்த இடைக்கால ஒப்பந்தம் சாத்தியமானது. இதனால் பிராந்தியத்தில் பதற்றம் சற்று தணிந்தாலும், நீண்டகால அமைதிக்கான முயற்சிகள் தொடர்ந்தன.

இந்த சூழலில், அமெரிக்காவுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தீவிர முயற்சி மேற்கொண்டது. இதன் விளைவாக, ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் (Mohammad Bagher Qalibaf) தலைமையிலான உயர்மட்டக் குழு ஏப்ரல் 11 அன்று (நேற்று) இஸ்லாமாபாத் வந்தடைந்தது. இந்தக் குழுவில் வெளியுறவு மந்திரி சையது அப்பாஸ் அராக்சி, பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி அக்பர் அகமதியன், மத்திய வங்கி கவர்னர் அப்துல் நாசர் ஹிம்மதி உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இதையும் படிங்க: ஈரான் போர் நிறுத்தம் அமலிலும் ஓயாத குண்டுமழை! லெபனான் மீது இஸ்ரேல் கோரத் தாக்குதல்!

பாதுகாப்பு, ராணுவம், பொருளாதாரம் மற்றும் சட்டம் தொடர்பான அதிகாரிகளும் இணைந்திருந்தனர். இது 1979 ஈரான் இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு அமெரிக்கா-ஈரான் இடையே நடைபெறும் மிக உயர்மட்ட நேரடி பேச்சுவார்த்தையாகக் கருதப்படுகிறது.

காலிபாஃப், இஸ்லாமாபாத் வந்ததும் நிருபர்களிடம் பேசுகையில், “அமெரிக்கர்களுடனான எங்கள் அமைதி முயற்சிகள் எப்போதும் தோல்வியிலும் வாக்குறுதி மீறல்களிலுமே முடிவடைந்துள்ளன. இருப்பினும், எங்களுக்கு நல்லெண்ணம் உள்ளது. ஆனால் நம்பிக்கை இல்லை” என்று தெரிவித்தார். மேலும், அவர் பயணித்த சிறப்பு விமானத்தில், மினாப் நகரில் தாக்குதலில் பலியானவர்களின் புகைப்படங்களை எடுத்து வந்ததாகவும், தனது எக்ஸ் (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் அதைப் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார். இது ஈரானின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது.

அமெரிக்க தரப்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்றது. இதில் டொனால்ட் டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ஜாரெட் குஷ்னர் உள்ளிட்டோர் அடங்குவர். பேச்சுவார்த்தைக்கு முன்பு டிரம்ப், வான்ஸுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், “என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம். அவர்கள் ராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுவிட்டனர்” என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகின.

இஸ்லாமாபாத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டன. செரீனா ஓட்டலில் (Serena Hotel) பேச்சுவார்த்தை நடைபெற்றது. தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன; வாகனப் போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் தடை செய்யப்பட்டது. முதலில் ஈரான் குழு பாகிஸ்தான் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தியது. பின்னர் அமெரிக்க குழுவுடன் நீண்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.

மதியம் 1 மணியளவில் தொடங்கிய இந்தப் பேச்சு ஏறக்குறைய 15 மணி நேரம் நீடித்து, அதிகாலை 3.40 மணி வரை நடைபெற்றது. இரு தரப்பும் எழுத்து வடிவ ஆவணங்களை பரிமாறிக் கொண்டனர். பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களில் அணுசக்தி திட்டம், பொருளாதாரத் தடைகள் நீக்கல், ஹார்முஸ் ஜலசந்தி கட்டுப்பாடு, லெபனான் தொடர்பான இஸ்ரேல் தாக்குதல்கள் மற்றும் நீண்டகால அமைதி ஒப்பந்தம் ஆகியவை இடம்பெற்றன. ஈரான் 10 அம்ச திட்டத்தை முன்வைத்துள்ளது.

பேச்சு இரண்டாவது நாளாகவும் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டாலும், சில அடிப்படை வேறுபாடுகள் காரணமாக இது தோல்வியில் முடிந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பதற்றத்தை தணிக்கும் முதல் பெரும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீஃப் இரு தரப்புடனும் தனித்தனியே பேச்சு நடத்தி மத்தியஸ்தம் வகித்தார்.

இந்தப் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றால், மத்திய கிழக்கில் நீண்டகால அமைதி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தோல்வியுற்றால், போர் மீண்டும் தீவிரமடையலாம் என்ற அச்சம் நிலவுகிறது. உலக நாடுகள் இந்த முயற்சியின் விளைவை உற்று நோக்கி வருகின்றன. 

இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு எதிரான போரில் "வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி"..!! அறிவித்த ஈரான்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share