×
 

அமெரிக்கா-ஈராக் உறவில் புதிய அத்தியாயம்... 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து! டிரம்ப் சந்திப்புக்கு பிறகு முக்கிய அறிவிப்பு!

அமெரிக்கா மற்றும் ஈராக் இடையே எண்ணெய் உற்பத்தி உள்ளிட்ட துறைகளின் கீழ் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈராக் நாடுகளுக்கு இடையே எண்ணெய் உற்பத்தி, மின்சாரம், தொலைத்தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 48 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக ஈராக் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார மற்றும் தொழில்துறை உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஈராக் பிரதமர் அலி அல்-சைதி அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்த அவர், இருநாடுகளின் எதிர்கால ஒத்துழைப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீண்ட காலமாக போர், அரசியல் குழப்பம் மற்றும் பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்ட நாடாக ஈராக் இருந்து வருகிறது. குறிப்பாக, முன்னாள் அதிபர் சதாம் உசேன் ஆட்சிக்காலத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட போர் சூழல்கள் அந்நாட்டின் வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதன் காரணமாக வறுமை, வேலைவாய்ப்பு குறைபாடு மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் தொடர்ந்து நீடித்து வந்தன.

இதையும் படிங்க: ஈரான் போர் எதிரொலி! அதல பாதாளத்தில் சரிந்த செல்வாக்கு! அமெரிக்க மக்களின் அதிருப்தியால் அதிபர் ட்ரம்ப் அதிர்ச்சி!

இந்த நிலையில், ஈராக்கின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அமெரிக்க நிறுவனங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈராக்கின் எண்ணெய் மற்றும் மின்சார அமைச்சகத்துக்கும் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களான எக்ஸான் மொபில், கேபிஆர், ஷெல் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

மேலும், ஈராக் மற்றும் சிரியா இடையே கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் அமைப்பை உருவாக்குவதற்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் எண்ணெய் ஏற்றுமதி மற்றும் எரிசக்தி துறையில் ஈராக்கின் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி நிறுவனமாக உள்ள எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடனும் ஈராக் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் ஈராக்கில் இணைய இணைப்பு வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்கா-ஈராக் இடையேயான இந்த புதிய ஒப்பந்தங்கள், போருக்குப் பிறகு வளர்ச்சியை நோக்கி பயணிக்க முயலும் ஈராக்கிற்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இரு நாடுகளின் உறவில் இந்த நடவடிக்கைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதை வரும் காலகட்டம் தீர்மானிக்கும்.

இதையும் படிங்க: ஈரான் ஒப்புக்கொள்ளாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்... டிரம்ப் கடும் எச்சரிக்கை; நெதன்யாகுவும் அதிரடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share