×
 

தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவி..!! ராஜினாமா செய்தார் துளசி கப்பார்ட்..!! காரணம் என்ன..??

டிரம்ப் நிர்வாகத்தின் தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவியை துளசி கப்பார்ட் ராஜினாமா செய்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் தேசிய உளவுத்துறை இயக்குநராக (Director of National Intelligence - DNI) பொறுப்பேற்றிருந்த துளசி கப்பார்ட், தனது கணவருக்கு கண்டறியப்பட்ட மிகவும் அரிதான எலும்புப் புற்றுநோய் காரணமாக பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜூன் 30-ஆம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

துளசி கப்பார்ட் தனது ராஜினாமா கடிதத்தை அதிபர் டிரம்பிடம் ஓவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்தபோது அளித்தார். அந்தக் கடிதத்தில், “என் கணவர் ஆபிரகாம் வில்லியம்ஸுக்கு சமீபத்தில் மிகவும் அரிதான வகை எலும்புப் புற்றுநோய் கண்டறியப்பட்டுள்ளது. அடுத்த வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் அவர் பெரும் சவால்களை எதிர்கொள்ளப் போகிறார். இந்த நேரத்தில் பொது சேவையிலிருந்து விலகி, அவருக்கு முழு ஆதரவுடன் அருகில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது” என்று எழுதியுள்ளார்.

இந்த முடிவு அமெரிக்க உளவுத்துறை சமூகத்தில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. துளசி கப்பார்ட், அமெரிக்காவின் 18 உளவுத்துறை அமைப்புகளை (CIA, FBI உள்ளிட்டவை) ஒருங்கிணைக்கும் முக்கிய பொறுப்பை வகித்து வந்தார். அவரது பதவிக்காலத்தில் உளவுத்துறையில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வருவதில் கவனம் செலுத்தினார் எனக் கூறப்படுகிறது. அவர் தனது பணிக்காலத்தில் கணவரின் ஆதரவை நினைவுகூர்ந்து, “என் படைத்துறை பணி, தேர்தல் பிரச்சாரம் மற்றும் இந்தப் பொறுப்பு ஆகிய அனைத்திலும் அவர் எனக்கு துணையாக இருந்தார்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு முயற்சி: ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை..!! கர்ஜித்த பிரதமர் மோடி..!!

அதிபர் டிரம்ப், துளசியின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, “துளசி அற்புதமான வேலை செய்தார். அவரது கணவரின் உடல்நிலை காரணமாக அவர் குடும்பத்துடன் இருக்க விரும்புகிறார். இது முழுமையாக புரிந்துகொள்ளக்கூடிய முடிவு” என்று பாராட்டு தெரிவித்தார். துளசி விலகிய பின்னர், தேசிய உளவுத்துறை முதன்மை துணை இயக்குநராக உள்ள ஆரோன் லூகாஸ் (Aaron Lukas) தற்காலிக இயக்குநராக பொறுப்பேற்பார் என்று அதிபர் அறிவித்துள்ளார். 

துளசி கப்பார்ட் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர். இந்து மதத்தைத் தழுவிய முதல் நபராக தேசிய உளவுத்துறை இயக்குநர் பதவிக்கு நியமிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது இந்த முடிவு அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்களில் பல்வேறு கருத்துகளை எழுப்பியுள்ளது. பலர் அவருக்கு ஆதரவும் பிரார்த்தனையும் தெரிவித்து வருகின்றனர். குடும்பத்தின் தனிப்பட்ட நெருக்கடியில் துளசி எடுத்துள்ள இந்த துணிச்சலான முடிவு, அரசியல்வாதிகளுக்கு இடையேயும் பொது மக்களிடையேயும் பெரும் மரியாதையைப் பெற்றுள்ளது. அவரது பணிக்காலம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடித்தது. 

இதையும் படிங்க: இஸ்ரேல் - லெபனான் போர் நிறுத்தம் நீட்டிப்பு! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share