மிஷின்லாம் இனி வேலைக்கே ஆகாது..!! சம்பளம் வாங்கும் 100 ஆடுகள்! வோக்ஸ்வாகனின் வித்தியாசமான 'ஊழியர்கள்'!
போலந்து நாட்டில் உள்ள தனது பிரம்மாண்ட தொழிற்சாலையின் புல்வெளிகளைப் பராமரிக்க, மெஷின்களுக்குப் பதிலாக '100 ஆடுகளை' வோக்ஸ்வாகன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக 'வேலைக்கு' அமர்த்தியுள்ளது.
உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான வோக்ஸ்வாகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. போலந்து நாட்டில் உள்ள தனது உற்பத்தி ஆலையில், புல்வெளிகளை பராமரிக்க இயந்திரங்களுக்குப் பதிலாக 100 ஆடுகளை 'வேலைக்கு' அமர்த்தியிருப்பது உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.
போலந்தின் போஸ்னான் நகரில் செயல்பட்டு வரும் வோக்ஸ்வாகன் தொழிற்சாலையில், 18.3 மெகாவாட் திறன் கொண்ட மிகப்பெரிய சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. குவாண்டா எனர்ஜி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த சோலார் பூங்காவில் 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. பேனல்களுக்கு அடியில் வேகமாக வளரும் புற்களை தொடர்ந்து அகற்றுவது நிறுவனத்திற்கு சவாலாக இருந்து வந்தது.
பொதுவாக இதற்காக பெட்ரோல் அல்லது டீசலில் இயங்கும் புல் வெட்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவை எரிபொருள் செலவு, காற்று மாசு மற்றும் அதிக இரைச்சலை ஏற்படுத்துகின்றன. இதற்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை தீர்வை வோக்ஸ்வாகன் தேர்வு செய்துள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் முடங்கும் சூரியசக்தி உற்பத்தி..!! மின் விநியோகத்தில் நெருக்கடி உருவாகும் அபாயம்..!!
'அக்ரிவோல்டாயிக்ஸ்' எனப்படும், விவசாயத்தையும் சூரிய ஆற்றல் உற்பத்தியையும் இணைக்கும் முறையின் ஒரு பகுதியாக, 100 ஆடுகள் சோலார் பேனல்களுக்கு இடையே மேய்ச்சலுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன. அவை புற்களை இயற்கையாக மேய்வதன் மூலம் புல்வெளி பராமரிப்பு பணியை மேற்கொள்கின்றன. இதனால் புல் வெட்டும் இயந்திரங்களின் பயன்பாடு குறைவதுடன், கார்பன் உமிழ்வும் கணிசமாக குறைகிறது.
சோலார் பேனல்கள் வெயிலில் இருந்து ஆடுகளுக்கு இயற்கையான நிழலை வழங்குகின்றன. மேலும், ஆடுகளின் கழிவுகள் மண்ணுக்கு இயற்கை உரமாக மாறுவதால், நிலத்தின் வளமும் மேம்படுகிறது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான பராமரிப்பு முறை உருவாகியுள்ளது.
இந்த திட்டத்தை வெறும் செலவைக் குறைக்கும் முயற்சியாக மட்டுமல்லாமல், போஸ்னான் உயிர் அறிவியல் பல்கலைக்கழகம் ஆய்வுத் திட்டமாகவும் முன்னெடுத்து வருகிறது. ஆடுகள் மேய்வதால் மண் வளம், பூச்சிகள் மற்றும் பறவைகளின் பல்லுயிர் பெருக்கம் எவ்வாறு அதிகரிக்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த முயற்சி குறித்து வோக்ஸ்வாகன் போஸ்னான் கிளை இயக்குநர் மர்சேனா பிலிச்-க்ரோன்ஸ்கா கூறுகையில், "நவீன தொழில்நுட்பமும் இயற்கையும் இணைந்து செயல்பட முடியும் என்பதை இந்த திட்டம் உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 1000 ஏவுகணைகள் தயார்! ஈரான் தான் டார்கெட்! அச்சுறுத்தும் அதிபர் ட்ரம்ப்!