×
 

விபத்து இழப்பீட்டுக்கு வரி இல்லை!  பட்ஜெட் 2026-ல் சாமானியர்களுக்கான வருமான வரி அதிரடிகள்!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரையும் சாமானியர்களையும் கவரும் வகையில் வருமான வரித் துறையில் பெரும் மாற்றங்களை அறிவித்துள்ளார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களை கவரும் வகையில் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விபத்து இழப்பீடுகளுக்கு வரி விலக்கு மற்றும் புதிய வருமான வரிச் சட்டம் அமலாக்கம் போன்றவை மிக முக்கியமான மாற்றங்களாகப் பார்க்கப்படுகின்றன.

விபத்து இழப்பீட்டுக்கு வரி விலக்கு: மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயங்கள் (MACT) மூலம் ஒரு தனிநபருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை மற்றும் அதற்கான வட்டிக்கு இனி வருமான வரி கிடையாது. இதற்கு இனி TDS பிடிக்கப்பட மாட்டாது.

இதையும் படிங்க: இந்தியா இனி உலகளாவிய உற்பத்தி மையம்!  பட்ஜெட் 2026-ல் மின்னணு மற்றும் கனரக தொழில்களுக்கான  அறிவிப்புகள்!

₹12.75 லட்சம் வரை வரி இல்லை: புதிய வரி விதிப்பு முறையின் கீழ், ஆண்டு வருமானம் ₹12 லட்சம் வரை ஈட்டுவோருக்கு முழு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சம்பளம் பெறுவோருக்கான தரநிலை விலக்கு ₹75,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளதால், மொத்தமாக ₹12.75 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் ஒரு பைசா கூட வரி செலுத்தத் தேவையில்லை.

புதிய வருமான வரிச் சட்டம் 2025: 60 ஆண்டுகாலப் பழைய 1961-ஆம் ஆண்டு சட்டத்திற்குப் பதிலாக, எளிமையான மொழியில் வடிவமைக்கப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது.

டிசிஎஸ் வரி குறைப்பு: வெளிநாட்டில் கல்வி பயில்வது, மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான நிதிப் பரிமாற்றங்களுக்கு விதிக்கப்படும் TCS வரி 5% மற்றும் 20%-லிருந்து 2%-ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

₹5,000 கோடி ஒதுக்கீடு: அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களின் (Tier 2 & 3) உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆண்டுக்கு ₹5,000 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய நீர்வழிப்பாதைகள்: அடுத்த 5 ஆண்டுகளில் நாட்டில் 20 புதிய தேசிய நீர்வழிப்பாதைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) சலுகைகள்:

முதலீட்டு வரம்பு உயர்வு: NRI-க்கள் இந்தியப் பங்குகளில் முதலீடு செய்வதற்கான Portfolio Investment Scheme வரம்பு 24%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

TAN எண் தேவையில்லை: இனி NRI-க்கள் மேற்கொள்ளும் சொத்துப் பரிவர்த்தனைகளுக்கு TAN எண் தேவையில்லை; PAN அடிப்படையிலான சலான் மூலமே வரி செலுத்தலாம்.

சொத்து வெளிப்படுத்தல்: 6 மாத கால வெளிநாட்டுச் சொத்து வெளிப்படுத்தல் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மருத்துவச் சுற்றுலா: நாடு முழுவதும் 5 மண்டல மருத்துவ மையங்கள் மற்றும் 3 புதிய அகில இந்திய ஆயுர்வேத நிறுவனங்கள் அமைக்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு: தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் உள்ள பழவேற்காடு ஏரியில் பறவைகளைக் கண்காணிக்க 3 புதிய கோபுரங்கள் அமைக்கப்படும்.

முந்திரி மற்றும் கோகோ இயக்கம்: இந்திய முந்திரி மற்றும் கோகோவை உலகத் தரத்திற்கு உயர்த்தப் பிரத்யேக இயக்கம் தொடங்கப்படும்.

தரவு மையங்களுக்கு வரி விலக்கு: இந்தியத் தரவு மையங்களைப் பயன்படுத்தும் வெளிநாட்டு கிளவுட்  நிறுவனங்களுக்கு 2047-ஆம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்படும்.

இதையும் படிங்க: 3 முக்கியக் கடமைகளின் அடிப்படையில் உருவான பட்ஜெட்! நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share