பழத்தோட்டத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்.. ராணுவம், போலீஸ், சிஆர்பிஎப் படையினர் கூட்டாக செய்த தரமான சம்பவம்..!
காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏகே-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன.
காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ல் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 போ் கொல்லப்பட்டனா். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமை இடமாக கொண்டு செயல்படும் லக்ஷர் இ தொய்பா என்ற பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் (The Resistance Front - TRF) என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதனை அடுத்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை மூலம் இந்திய விமானப் படை, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசி அழித்தது.
இதைத் தொடா்ந்து பாகிஸ்தான் தரப்பு ஜம்மு-காஷ்மீா், பஞ்சாப், குஜராத், ராஜஸ்தான் ஆகிய எல்லையோர மாநிலங்களைக் குறிவைத்து ஏவுகணைகள், ட்ரோன்களை ஏவியது. ஆனால், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அவற்றை வெற்றிகரமாக முறியடித்தன. பதிலடியாக பாகிஸ்தான் விமானதளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துல்லிய ஏவுகணைத் தாக்குதலையும் இந்தியா நடத்தியது.
இதையும் படிங்க: புருஷனை கொல்லுறப்போ கைகட்டியா நிப்பீங்க! பெண்களுக்கு வீரமே இல்லை! பாஜ எம்.பி சர்ச்சை பேச்சு..!
உச்சகட்ட பதற்றத்துக்கு இடையே பேச்சுவார்த்தை மூலம் உடனடி சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இன்னமும் ஆப்ரேஷன் சிந்தூர் முடிவடைய வில்லை. பயங்கரவாதத்தை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, மாநிலம் முழுதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.தினமும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடக்கிறது. தாக்குதலுக்கு பிறகு நடந்த என்கவுன்டர்களில் இதுவரை 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.
இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் பாஸ்குசான் இமாம்சாஹிப் பகுதியில் உள்ள ஒரு பழத்தோட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது.உடனே ராணுவம், போலீஸ், சிஆர்பிஎப் படையினர் கூட்டாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மொத்த தோட்டத்தையும் சுற்றி வளைத்தனர்.
உள்ளே பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் ராணுவம் தங்களை சுற்றி வளைத்ததை உணர்ந்தனர்.இந்த மாதிரி நேரத்தில் வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள். அதற்கு நம் வீரர்களும் பதிலடி கொடுப்பார்கள். இப்படி தான் பயங்கரவாதிகள் என்கவுன்டர் நடக்கும்.
ஆனால் இந்த முறை பழத்தோட்டத்துக்குள் பதுங்கி இருந்த 2 பயங்கரவாதிகளும் வழக்கத்துக்கு மாறாக ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடைவதாக அறிவித்தனர்.இதை தொடர்ந்து அவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் இர்பான் பஷீர், உசைர் சலாம் என்பது தெரியவந்தது. 2 பேருமே பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள்.
பயங்கரவாதிகளிடம் இருந்து 2 ஏகே-56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள், 2 கையெறி குண்டுகள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டன. பஹல்காம் தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளும் இதே லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்தவர்கள் தான்.
எனவே கைதானவர்களிடம் இருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றியோ அல்லது தாக்குதல் பற்றியோ வேறு ஏதேனும் தகவல் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரகசிய இடத்தில் வைத்து பயங்கரவாதிகள் 2 பேரிடமும் விசாரணை நடக்கிறது. சோபியானில் தேடுதல் வேட்டையும் தொடர்கிறது.
இதையும் படிங்க: இனியும் தீவிரவாதம் தொடர்ந்தால்.. பாகிஸ்தானுக்கு ஜெய்சங்கர் பகிரங்க எச்சரிக்கை..!