கடவுள் தேசத்தில் பேய்மழை.! திரிச்சூர் கட்டடம் இடிந்ததால் அலறி துடித்த உயிர்கள்.!
கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு இன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. திரிச்சூர், மலப்புரம், திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடி கனமழை பெய்தது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மதியம் வெளியிட்ட அறிக்கையில் மாநிலத்தில் ஜூன் 29 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறி பல்வேறு அலர்ட்டுகளை விடுத்தது. இன்று இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கும் நாளை இடுக்கி, கோட்டயம், பத்தனம்திட்டா, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, காசர்கோடு மாவட்டங்களுக்கும், நாளை மறுநாள் (ஜூன் 29) இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம், மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார் மாவட்டங்களுக்கும் பலத்த மழைக்கான ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போன வருஷமே தாங்கல.. மறுபடியுமா..! வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு.. பீதியில் மக்கள்..!
மாநிலத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிவதால், பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திரிச்சூரின் கோடக்கரா பகுதியில், 40 ஆண்டு பழமையான 2 அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்தது.
அந்த கட்டடத்தில், வெளிமாநிலங்களை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 20 பேர் தங்கியிருந்தனர். கனமழையால் நன்கு ஊறியிருந்த கட்டடத்தின் மேல் பகுதி இடியும் சத்தம் கேட்டு அங்கிருந்த தாெழிலாளர்கள் வெளியே ஓடினர். அதற்குள் கட்டடம் இடிந்ததில், மூன்று பேர் இடிபாடுகளில் சிக்கினர். 17 பேர் காயங்கள் இன்றி உயிர் தப்பினர். மீட்பு படையினர் உடனே வரவழைக்கப்பட்டு இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட இருவர், ஆஸ்பிடலுக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
மேலும் ஒருவர் கட்டட இடிபாடுகளுக்குள் புதைந்து உயிரிழந்தார். அவரது உடலை மீட்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் மேற்கு வங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கட்டடத்தின் உரிமையாளர் யார், தொழிலாளர்கள் பணி புரிவது எங்கே என்பது குறித்து போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.
கேரளாவின் மலைப்பாங்கான இடங்களில் மலைச்சரிவும், நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளில் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கேரளா, கர்நாடகாவை புரட்டிப்போட்ட கனமழை.. ஆட்டம் காட்டும் தென்மேற்கு பருவமழை..