×
 

நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும்! வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மு.க.ஸ்டாலின் ஆவேசம்!

ஆண்டுதோறும் மாணவர்களின் வாழ்க்கை மற்றும் மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்துடனும்,  விளையாடும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும் என மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட்-யுஜி 2026 தேர்வினை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசின் இந்தத் திடீர் ரத்து நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள மு.க. ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டதாவது ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கை மற்றும் மாநில மருத்துவக் கட்டமைப்பின் எதிர்காலத்துடனும், மக்களின் உயிரோடும் விளையாடும் நீட் தேர்வு ஒழிக்கப்பட வேண்டும். இது மாணவர்களின் கல்வித் தகுதியை அளவிடும் தேர்வு அல்ல, அவர்களின் உழைப்பைச் சுரண்டும் சூதாட்டம்.

ஒவ்வொரு முறையும் நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் எனப் புகார்கள் எழுவதும், பின்னர் தேர்வு ரத்து செய்யப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. இது தேசிய தேர்வு முகமையின் (NTA) கையாலாகாத தனத்தையே காட்டுகிறது. மாநிலங்களின் மருத்துவக் கல்வி உரிமையைப் பறித்து, ஒரு தரப்பினருக்கு மட்டும் சாதகமாகச் செயல்படும் இந்தத் தேர்வை இனியும் அனுமதிக்க முடியாது. சிபிஐ விசாரணை என்பது வெறும் கண்துடைப்பு நாடகமாக முடிந்துவிடக் கூடாது.

இதையும் படிங்க: மருத்துவக் கனவுகளின் தேசிய போட்டி..!! நாளை மறுநாள் நீட் தேர்வு..!! AI மூலம் கண்காணிப்பு..!!

தமிழகத்தில் தற்போது பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றத் திட்டமிட்டுள்ள சூழலில், மு.க. ஸ்டாலினின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது. "தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழக மாணவர்களின் நலனுக்காக நீட் தேர்வை எதிர்ப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான் வினாத்தாள் கசிவு விவகாரம், நீட் தேர்வின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்படவும் வழிவகுத்துள்ளது. "ஒரே நாடு, ஒரே தேர்வு" என்ற கொள்கை மாணவர்களின் சமத்துவத்தைப் பாதிக்கிறது என்ற வாதம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள மன உளைச்சலுக்கு மத்திய அரசே பொறுப்பேற்க வேண்டும் எனவும், இனி வரும் காலங்களில் மாநிலப் பாடத்திட்ட மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவச் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் எனவும் திமுக தலைவர் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: NEET 2026: மாணவர்களே..!! மன அழுத்தமா..?? கவலை வேண்டாம்.. இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share