×
 

"ரீல்ஸ் Content போட டாக்டர் வேஷமா?": அரசு மருத்துவமனைகளில் தவெக ஆய்வுக்கு அதிமுக ஐடி விங் கடும் கண்டனம்!

டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கிறார்கள் எனக் கூறி, தங்களது ரசிகர் கும்பலை அடக்கி வைக்குமாறு முதலமைச்சர் விஜய்க்குப் பகிரங்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பொது மருத்துவமனைகளில், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரப்பூர்வமாக ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மருத்துவ அணியினர் தன்னிச்சையாக அரசு மருத்துவமனைகளுக்குள் புகுந்து திடீர் ஆய்வு என்ற பெயரில் மக்கள் தொடர்பு விளம்பரத் தேடலில் (PR Stunt) ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சியான அதிமுகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு (ADMK IT Wing) மிகக் கடுமையான விமரிசனங்களை முன்வைத்துள்ளது.

இது குறித்து அதிமுக ஐடி விங் தங்களது அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், "தமிழகம் முழுக்க உள்ள அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் ஒரு தரம் தாழ்ந்த விளம்பரத் தேடலை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தவெக மருத்துவ அணி என்ற பெயரில், தங்களது கருப்பு கோட் (Coat) அணியும் தலைவரைப் போலவே, இவர்களும் வெள்ளை கோட்டை மாட்டிக் கொண்டு ஊரில் இருக்கும் அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சட்டவிரோதமாகச் சென்று அங்கிருக்கும் அரசு மருத்துவர்களையும், பெண் செவிலியர்களையும் பணி செய்ய விடாமல் மிரட்டி வருகிறார்கள்" என்று அக்குவேறு ஆணிவேறாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், முந்தைய திமுக அரசின் நிர்வாகக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, "ஏற்கனவே முந்தைய திமுக அரசால் அரசு மருத்துவமனைகளில் பல்லாயிரக்கணக்கான மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே கிடக்கின்றன. இதனால், அங்குப் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போதிய ஓய்வின்றி, மிகக் கடுமையான மன அழுத்தத்திற்கு (Stress) ஆளாகியுள்ளனர். இத்தகைய இக்கட்டான சூழலில், தவெகவினர் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் 'ரீல்ஸ் Content' போடுவதற்காக, இரவு நேரங்களில் மருத்துவப் பணியாளர்களை மேலும் தொந்தரவு செய்வது எப்படிப்பட்ட ஒரு நோயுற்ற மனநிலை (Sick Mindset)?" என்று மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை.. 12 மாவட்டங்களுக்குக் கனமழை எச்சரிக்கை..!

மருத்துவமனை ஆய்வுகளுக்கான முறையான நெறிமுறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள அதிமுக, "அரசு மருத்துவமனைகளில் குறைபாடுகள் இருந்தால் அதை ஆய்வு செய்ய வேண்டியது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரின் பணி; அல்லது துறை அதிகாரிகளோடு இணைந்து அந்தந்தப் பகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் (MLAs) ஆய்வு நடத்தலாம். அதை விடுத்து, சினிமா படம் போல டாக்டர் வேஷம் போட்டுக்கொண்டு, மருத்துவ அணி எனக் கூறிக்கொண்டு, அவசரச் சிகிச்சைப் பிரிவுகளுக்குள் புகுந்து மருத்துவப் பணிக்கு இடையூறு விளைவிப்பதோடு, அங்குப் படுத்துறங்கும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை (Endanger) விளைவிக்கும் உங்கள் ரசிக வெறி கும்பலை உடனடியாக அடக்கி வையுங்கள்" என்று தவெக தலைமை அலுவலகப் பக்கத்தைக் (@TVKVijayHQ) குறிப்பிட்டுப் பகிரங்கமாக எச்சரித்துள்ளது.

மேலும், அரசு மருத்துவமனைகளில் அத்துமீறி நுழையும் இத்தகைய வெளிநபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து, மருத்துவப் பணியாளர்களை அவர்களின் பணிகளைத் சுதந்திரமாகச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் அலுவலகப் பக்கத்திற்கும் (@CMOTamilNadu) கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய தவெக அரசுப் பொறுப்பேற்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், 'பொய்க்கால் குதிரை அரசு' என்ற ஹேஷ்டேக்குடன் அதிமுக ஐடி விங் வெளியிட்டுள்ள இந்த அனல் பறக்கும் பதிவு, கோட்டை வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் தவெக மற்றும் அதிமுக தொண்டர்களிடையே மிகப்பெரிய வார்த்தைப் போராக வெடித்துள்ளது.

 

 

இதையும் படிங்க: கூட்டணி ஆட்சி அமைக்கிறார் முதல்வர் விஜய்.. நாளை காலை 10 மணிக்குத் தமிழக அமைச்சரவை விரிவாக்கம்!  

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share