விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தை பராமரித்தது யார்? பதறி அடித்து விளக்கம் சொன்ன துருக்கி..!
விபத்துக்குள்ளான போயிங் - 787 ரக விமானத்தை, துருக்கியைச் சேர்ந்த விமான பராமரிப்பு நிறுவனம் பராமரித்து வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின. இந்த ரக விமானங்களை 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பராமரிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக அதில் கூறப்பட்டது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக்கிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 (போயிங் 787-8) விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானிநகர் குடியிருப்பு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர்.
இரண்டு விமானிகள் உள்பட 12 விமான ஊழியர்கள் இதில் அடங்குவர். இதில் 11ஏ இருக்கையில் பயணம் செய்த ரமேஷ் விஷ்வாஸ்குமார் என்ற பயணியை தவிர மற்ற 241 பெரும் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும் விமானம் வெடித்து சிதறியதால் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மிகப்பெரிய சேதம் ஏற்பட்டது.
கல்லூரி வளாகத்தில் இருந்த ஏராளமானவர்கள் இந்த கோர விபத்தில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 33 பேர் பலியாகி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. இதனால் அகமதாபாத் விமான விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 274 ஆக உயர்ந்து இருக்கிறது. விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு, தலா 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என, டாடா குழுமம் அறிவித்து இருந்தது. இறந்தவர்களுக்கும், உயிர் பிழைத்தவர்களுக்கும் தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால நிவாரணமாக வழங்க ஏர் இந்தியா முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க: செத்துட்டேன்னு தான் நினைச்சேன்! உயிர் பிழைச்சதை நம்ப முடியல! மவுனம் கலைத்தார் விபத்தில் தப்பிய விஸ்வாஸ் குமார்..
இதற்கிடையே விமானத்தின் கருப்பு பெட்டி கண்டறியப்பட்டு, விபத்து குறித்த விசாரணை நடக்கிறது. இந்த நிலையில் துருக்கியை சேர்ந்த Turkish Technic என்ற நிறுவனம் தான் பெரும்பாலான ஏர் இந்தியா விமானங்களை பராமரிக்கிறது. விபத்துக்கு பின்னால் துருக்கியின் சதி இருக்கலாம் என்கிற யூகங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. ஏனென்றால் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் போது பாகிஸ்தானுக்கு நேரடியாக உதவி செய்த நாடு துருக்கி.
பாகிஸ்தான் இந்தியா மீது ஏவிய பெரும்பாலான ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதையடுத்து இந்தியாவில் உள்ள ஒன்பது முக்கிய ஏர்போர்ட்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட Celebi என்ற துருக்கி நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னணியில் தான் தற்போது Turkish Technic நிறுவனத்தின் மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையில், விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமான பராமரிப்புக்கும், எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என துருக்கி அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு தகவல் தொடர்பு இயக்குநரகம் விளக்கம் அளித்துள்ளது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா நிறுவனத்தின் போயிங் 787-8 வகை விமானம் துருக்கி நிறுவனத்தால் பராமரிக்கப்பட்டது என வெளியான தகவல் உண்மையல்ல.ஏர் இந்தியா மற்றும் துருக்கி விமான தொழில்நுட்பக் குழுவின் இடையே 2024, 2025ம் ஆண்டுகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
இந்த ஒப்பந்தங்களின் கீழ் பி777 வகை விமானங்கள் மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. விபத்துக்குள்ளான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் எங்கள் ஒப்பந்தத்தில் இடம் பெறவில்லை. துருக்கி நிறுவனம் இன்றுவரை அத்தகைய ஏர் இந்தியா விமானங்களை பராமரிக்கவில்லை. விபத்துக்குள்ளான விமானத்தின் இறுதி பராமரிப்பை எந்த நிறுவனம் செய்தது என்பதும் எங்களுக்குத் தெரியும். ஆனால், இந்த விஷயத்தில் அவர்களைப் பற்றி அறிக்கையில் வெளியிட எங்களுக்கு எந்த தேவைகளும் இல்லை.
ஒரு தவறானத் தகவலை மையமாக்கி, சர்வதேச அரங்கில் துருக்கியை பிரதிநிதித்துவப்படுத்துவது சரியல்ல. எங்களது நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கத்துடன் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆமதாபாத்தில் DNA பரிசோதனை தீவிரம்.. கருகிய உடல்களை கண்டு கதறி அழும் உறவினர்கள்..!