நாடே அழுதப்போ கொண்டாட்டம் ஒரு கேடா! ஏர் இந்தியா ஊழியர்களின் தரம் கெட்ட செயலால் அதிர்ச்சி!
ஆமதாபாத் விமான விபத்துக்குள்ளான பிறகு, ஏர் இந்தியா விமான சரக்குகளை கையாளும் பிரிவு நிறுவன (AISATS) ஊழியர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, சீனியர் அதிகாரிகள் 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
உலகத்தையே அதிர வைத்த ஆமதாபாத் விமான விபத்தில் இன்னும் மர்மம் விலகவில்லை. ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்திய 171 ரக விமானம், டேக் ஆப் ஆன ஒரு நிமிடத்துக்குள் விபத்துக்குள்ளானது. ஏர்போர்ட்டுக்கு பக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் மெஸ் பில்டிங் மீது விழுந்து வெடித்தது. விமானத்தில் இருந்த 242 பேரில் 241 பேர் இறந்தனர். ஒருத்தர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் விழுந்ததில் கல்லூரி மெஸ், விடுதியில் இருந்த மேலும் 33 பேர் மரணம் அடைந்தனர். மொத்த பலி 274 ஆக உயர்ந்தது.
உலகை உலுக்கிய விமான விபத்து எப்படி நடந்தது என்று இப்போது வரை தெரியவில்லை. பொதுவாக 3000 முதல் 4000 அடி உயரத்தில் விமானம் பறக்கும். அவ்வளவு உயரத்துக்கு டேக் ஆப் செய்ய வேண்டும். ஆனால் 645 அடி விமானம் சென்ற போதே சட்டென கீழே இறங்கி விழுந்து நொறுங்கியது.
கடைசியாக விமான கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்ட பைலட் மேடே அலர்ட் விடுத்து இருந்தார். இது விமானம் ஆபத்தில் சிக்கி இருப்பதை சொல்ல பயன்படுத்தும் ஒரு அபாய வார்த்தை. இதை சொன்ன மறுநொடியே விபத்து நடந்து விட்டது.
இதையும் படிங்க: கருப்பு பெட்டி உடைந்ததா? ஆமதாபாத் விமான விபத்தில் விலகாத மர்மம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!!
எனவே பிளாக் பாக்ஸ் கிடைத்தால் தான் உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியவரும் என்று முதலில் சொல்லப்பட்டது. விமானம் துவக்கம் முதல் விபத்து வரை எந்த நேரத்தில் எவ்வளவு வேகம், எவ்வளவு உயரத்தில் சென்றது என்பதை எல்லாம் இதை வைத்து கண்டுபிடிக்கலாம். தற்போது இதிலிருந்து தரவுகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தியாவில் நடந்த மிக மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக இது பார்க்கப்படும் சூழலில், விபத்து நடந்த சில தினங்களில் ஏர்இந்தியா நிறுவனத்தின் துணை அமைப்பாக செயல்படும் ஏர் இந்தியா சாட்ஸ் விமான நிலைய சேவைகள் லிமிடெட் நிறுவன (Air India SATS Airport Services Private Limited-(AISATS) அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் டில்லி அருகே குருகிராமில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடனமாடி மகிழ்ந்தனர்.
இது குறித்த வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மக்கள் கடும் கோபம் அடைந்தனர். (AISATS) நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உணவு உள்ளிட்ட சேவைகளை வழங்குகிறது. அதில் பணியாற்றும் ஊழியர்களின் நடன நிகழ்ச்சி குறித்து, அந்த நிறுவனம் விசாரணை நடத்தி தற்போது நான்கு மூத்த அதிகாரிகளை பணி நீக்கம் செய்திருக்கிறது.
விமான விபத்துக்கு பிறகு நடந்த இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுடைய செயல் எங்கள் நிறுவன மதிப்பை குறைக்க அனுமதிக்கமாட்டோம் என AISATS நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிங்க: ஏர் இந்தியாவிற்கு வந்த அடுத்த சோதனை.. பாம் இருப்பதாக வந்த மிரட்டல்.. பரபரப்பான தாய்லாந்து ஏர்போர்ட்..!